Skip to main content

விரைவில் நெடுவாசலில் போராட்டம் - வடகாடு ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்

Published on 12/05/2018 | Edited on 12/05/2018
neduvasal

   

நெடுவாசல் கிராமத்தில் விரைவில் மறு போராட்டம் நடத்தப்படும் என்று வடகாட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


     புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அறிவித்ததுடன் போராட்டம் தொடங்கியது. இந்த நிலையில் திட்டம் வராது என்று மத்திய மாநில அமைச்சர்கள் உறுதியளித்து போராட்டத்தை வாபஸ் பெற செய்தனர். ஆனால் அதன் பிறகு மத்திய அரசு  தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததால் மறு போராட்டம் நெடுவாசலை சுற்றி வடகாடு, கீரமங்கலம், ஆலங்குடி மற்றும் பல கிராமங்களில் நடந்தது. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு போட மாட்டோம் என்று சொன்னாலும் தற்போது கீரமங்கலத்தில் 7 பேர், வடகாடு 13, ஆலங்குடியில் 42 என 62 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. அதனால் போராட்டக்குழுவினர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினார்கள்.


    இது குறித்து நெடுவாசல் போராட்ட உயர்மட்டக்குழு மற்றும் கீரமங்கலம், வடகாடு சுற்றுவட்டார கிராம மக்களின் ஆலோசனைக் கூட்டம் வடகாடு கிராமத்தில் ஒரு தனியார் மண்டபத்தில் உயர்மட்டக்குழு தலைவர் முன்னால் எம்எல்ஏ புஜ்பராஸ் தலைமையில் ஆலங்குடி எம்எல்ஏ மெய்யநாதன், முன்னால எம்எல்ஏ ராஜசேகரன், உயர்மட்டக்குழு தெட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
  

 கூட்டத்தில் மத்திய மாநில அரசுகளை போல மாவட்ட நிர்வாகமும் ஏமாற்றி வருகிறது. ஆழ்குழாய் கிணறுகளை அகற்றுவதாகவும் போராடியவர்கள் மீது வழக்கு பதிவு இருக்காது என்றும்  மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்தது. ஆனால் இப்போது வரை எதையும் செய்யவில்லை என்றனர்.


   தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.   போராடியவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்பதை மாவட்ட கலெக்டரை சந்தித்து வலியுறுத்த வேண்டும். நீதிமன்றத்தில் ஆஜராக செல்லும் நபர்களுடன் ஏராளமானோர் பேரணியாக செல்ல வேண்டும்.


  வழக்குகளை திரும்ப பெறவில்லை என்றாலும் அதே போல ஜெம் நிறுவனம் ஒதுங்கியது போல மத்திய அரசும் ஒதுங்க வேண்டும் அதற்கு மாநில அரசு அழுத்தும் கொடுக்க வேண்டும்.


 இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் அனைத்துகட்சி தலைவர்கள், அமைப்புகள், இளைஞர்கள், விவசாயிகள் கலந்து கொள்ளும் பிராமாண்ட போராட்டம் நெடுவாசலில் நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சார்ந்த செய்திகள்

Next Story

"பயிர்கள் மழைநீரில் மூழ்கி, முளைத்தும் அழுகியும் அழிந்து நாசமாகி விட்டன" - பிஆர்.பாண்டியன்

Published on 16/01/2021 | Edited on 16/01/2021

 

p.r. pandiyan about damages in delta districts

 

தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பாதிப்புகளை ஆய்வு செய்து வரும் பி.ஆர்.பாண்டியன் இன்று  புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஆய்வு செய்தபின் பேசும்போது, "தமிழ்நாட்டில் வானிலை மையம் கூட கணிக்க முடியாத வகையில் பருவம் தப்பிய தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் கடலூர் மாவட்டம் முதல் புதுக்கோட்டை மாவட்டம் வரை  டெல்டா பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த 15 லட்சம் ஏக்கர் நெல் பயிர்கள் மழைத்தண்ணீரில் மூழ்கி முளைத்தும் அழுகியும் அழிந்து நாசமாகி விட்டன. இந்த நிலையில் தமிழக அரசு ஒரு ஹெக்டேருக்கு இடுபொருள் செலவாக ரூபாய் 20 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவித்து கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. இதில் பல கிராமங்கள் விடுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

 

அரசு உடனடியாக அந்த நடைமுறையைக் கைவிட்டுவிட்டு டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் 100 சதவீத இழப்பீடு வழங்க வேண்டும். பாதிப்பின் தன்மையை அரசு உணர்ந்து உடனடியாக உயர்மட்ட குழுவை அமைத்து நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்.  காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு மார்ச் மாதத்திற்குள் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முந்தைய காலங்களில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுத்தார். அதே போல எடப்பாடி அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு பருவம் தப்பிய மழை பாதிப்புகளைக் கணக்கில் கொண்டு பேரிடர் பகுதியாக அறிவித்து உரிய நிதியை வழங்க வேண்டும்" என்றார்.

 

 

Next Story

"நெடுவாசலில் போராட்ட நினைவுத் தூண் அமைக்க வேண்டும்" - பி.ஆர்.பாண்டியன்...

Published on 16/01/2021 | Edited on 16/01/2021

 

p.r.pandiyan reqquest to neduvasal people

 

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய 2017 பிப்ரவரி 15 ந் தேதி மாலை ஒப்புதல் அளித்த நிலையில் 16 ந் தேதி காலை திட்டத்தைக் கைவிடக் கோரி அங்குள்ள கடைவீதியில் விவசாயிகள் 100 பேர் திரண்டு அடையாள ஆர்ப்பாட்டம் செய்து கையெழுத்து இயக்கம் நடத்தினார்கள். அதன் பிறகு இது தொடர் போராட்டமாக மாறியது. நாடியம்மன் கோயில் ஆலமரத்திடல் போராட்டக் களமானது. அதுவரை போராட்டம் என்றால் மறியல், முற்றுகை, ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது தான் வழக்கம். ஆனால் நெடுவாசலில் அப்படியே தலைகீழாக மாறி, போராட்டம் என்பது கலைத் திருவிழா போல நடந்தது. 

 

ஆட்டம், பாட்டம், கலை நிகழ்ச்சிகள், அரசியல் தலைவர்களின் உரைவீச்சு, சினிமா நட்சத்திரங்கள் எனப் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது. போராட்டக்களத்திற்கு வந்தவர்களை இருகரம் கூப்பி வரவேற்று அவர்களுக்கு உணவளித்து உபசரித்தார்கள் போராட்டக் குழுவினர். தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி போராட்டம் செய்தாலும் இந்த நூற்றாண்டில் நடந்த முக்கியமான அமைதி வழி போராட்டங்களில் ஒன்றாக மாறியது. இந்த போராட்டத்தின் நினைவாக நினைவுத் தூண் அமைக்க வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் நெடுவாசல் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். 

 

இது பற்றி அவர் கூறும் போது, "நெடுவாசல் கிராமத்தில் வரலாறு காணாத போராட்டத்தைச் சுதந்திரத்திற்குப் பிறகு இப்பகுதி விவசாயிகள் காந்திய வழியில் நடத்தி உலகத்தின் பார்வையைத் திருப்பி உள்ளனர். எதிர்காலத்தில் இனி விவசாயிகள் வாழ்க்கையே போராட்டமாக மாறி வருகிறது. எனவே நெடுவாசல் போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம் என்பதால், எதிர்கால சந்ததியினருக்கு இப்போராட்டத்தை நினைவு கூறும் வகையில் நெடுவாசல் கிராமத்தில் நினைவுத்தூண் அமைக்க வேண்டும் என நான் கேட்டுக் கொண்டுள்ளேன். விரைவில் அமைப்பதாக  கிராம மக்கள் கூறியுள்ளனர்" என்றார்.