சேலத்தில், தொழில் கடன் சிறப்பு முகாம் புதன்கிழமை (ஆக. 17) தொடங்குகிறது. இதில், 25 சதவீத முதலீட்டு மானியம் 1.50 கோடி ரூபாய் வரை வழங்கப்படும்.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அளவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு நிதிக்கழகம் 1949ம் ஆண்டு துவங்கி, மாநில அரசின் ஆதரவுடன் தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி, தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. இந்தக் கழகம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், இயங்கிக் கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் சேலம் கிளையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான தொழில் கடன் வழங்கும் சிறப்பு முகாம் ஆகஸ்ட் 17ம் தேதி (புதன்கிழமை) முதல் செப். 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு தொழில் கடன் முகாமில் டிஐஐசியின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், ஒன்றிய, மாநில அரசுகளின் மானியங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் வழங்கப்படுகின்றன.
தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் 1.50 கோடி ரூபாய் வரை வழங்கப்படும். சிறப்பு முகாம் நடைபெறும் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். இந்த வாய்ப்பை, புதிய தொழில் முனைவோர்கள், தொழில் அதிபர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளையும் பெற முடியும். மேலும் தகவல்களை 94443 96850, 94443 96809 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.