ADVERTISEMENT

அரை கிலோமீட்டர் தூரம் காரில் தொங்கியபடி... கடத்தப்பட்ட தங்கையை காப்பாற்றிய அக்கா!

10:24 AM Jul 04, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும், தியாகதுருகத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வெங்கடேசன், தனது மனைவியின் தங்கையை காதலித்து உள்ளார். இதற்கு குடும்பத்தினர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேற்று அந்தப் பெண் தனது மற்றொரு அக்காவுடன் விழுப்புரம் மேற்கு காவல் நிலையம் எதிரில் உள்ள ஒரு நகை கடைக்கு நகைகள் வாங்குவதற்கு வந்துள்ளார். அப்பொழுது சென்னையில் இருந்து இந்தப் பெண்ணை தேடி வந்திருந்த வெங்கடேஷ், தனது மனைவியின் தங்கையை திடீரென்று தான் எடுத்து வந்த காரில் கடத்தியுள்ளார்.

இதனை கண்டு அந்தப் பெண்ணுடன் வந்திருந்த அவரின் அக்கா அதிர்ச்சியடைந்தவுடன், காரில் தனது தங்கையை கடத்தி செல்வதை தடுக்கும் பொருட்டு கடத்தப்பட்ட அந்த காரில் தொங்கியபடியே சென்றுள்ளார். வெங்கடேசன், காரை நிறுத்தாமல் அரை கிலோமீட்டர் தூரம் சென்றுள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் காரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து காரில் வந்தவரை தாக்கியுள்ளனர். மேலும், அந்த இரண்டு பெண்களையும் மீட்டுள்ளனர்.


பின்னர் காவல்துறைக்கு இது குறித்து தகவல் கொடுத்தனர். அந்தத் தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், கடத்தல் கார் உட்பட அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT