ADVERTISEMENT

அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிரதமர் மோடி படத்தை மாட்ட வேண்டும்! பாஜக மாநில விவசாய அணி தலைவர் வலியுறுத்தல்!!

10:54 AM Sep 14, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் தனபால் தலைமையில் நடைபெற்றது. இதில், மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே. நாகராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதன்பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ், “திண்டுக்கல் குடகனாற்றில் கட்டப்பட்ட தடுப்பணையை அகற்றி நீர் பங்கீட்டு முறையை அமல்படுத்தவும், தோல் தொழிற்சாலை கழிவுநீர் குடகானாற்றில் கலக்காதவண்ணம் விவசாயிகள் வாழ்வாதாரத்தையும் பொதுமக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டும். சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவிற்கு வத்தலகுண்டு பகுதியில் மணி மண்டபம் அமைக்க வேண்டும்.

சுதந்திர போராட்டத்தில் புரட்சி படை அமைத்து போரிட்ட ராணி வேலு நாச்சியார் மற்றும் ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்த காரணத்தினால் ஆங்கிலேய அரசால் தூக்கிலிடப்பட்ட கோபால நாயக்கருக்கு அவரை தூக்கிலிடப்பட்ட இடமான திண்டுக்கல் கோபால சமுத்திர கரையில் நினைவுத்தூண் அமைக்க வேண்டும். பாரத பிரதமரின் உன்னதமான ஆயுஷ்மான் பாரத் எனப்படும் காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள தனியார் மருத்துவமனைகள் பொதுமக்களை அலட்சியப்படுத்துவதிலும் அலைக்கழிப்பதிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற மருத்துவமுறைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். திண்டுக்கல் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அரண்மனைக் குளத்தை தூர்வாரி மழைநீரை சேமிப்பதன் மூலம் மாநகர நிலத்தடி நீர் வளத்தை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் கனவுத் திட்டமான அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை ஊராட்சி பகுதிகளில் முறையாக பயன்படுத்த வேண்டும்.

நத்தம் தொகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திட அப்பகுதியில் அதிகமாக விளையும் மாம்பழம் மற்றும் புளி ஆகியவற்றிற்கு பதப்படுத்தும் கிடங்கு அமைக்க வேண்டும். நிலக்கோட்டை தொகுதியில் உங்களுக்கான குளிர்பதன கிடங்கு அமைத்திட வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்தை வைக்க வேண்டும். மத்திய அரசின் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6000 வழங்கும் திட்டத்தில் பல்வேறு ஊழல்கள் அரங்கேறியுள்ளது. தமிழக முதல்வர் மத்திய அரசின் நலத்திட்டங்களில் ஊழல் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊழல் செய்பவர்களின் சொத்துகளை முடக்க வேண்டும். கூட்டணி என்பது வேறு மக்களுடைய நலத்திட்டங்களை கொண்டு செல்வதில் ஒருபோதும் நாங்கள் பின்வாங்கமாட்டோம்” என்று கூறினார். இக்கூட்டத்தில் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT