ADVERTISEMENT

காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது! 

11:13 AM Apr 11, 2024 | prabukumar@nak…

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இத்தகைய சூழலில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் வாக்குச்சாவடிக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், கண் பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காகத் தபால் வாக்கு செலுத்தும் வசதி தேர்தல் ஆணையத்தால் ஏற்படுத்தப்பட்டது. அதே போன்று தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரும் தபால் வாக்குச் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், சென்னையில் பணியாற்றும் காவலர்கள் இன்று (11.04.2024) முதல் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகர காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் இன்று முதல் 13 ஆம் தேதி வரை தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தபால் வாக்குகளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு உட்பட்ட 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் சிறப்பு மையங்களில் தபால் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் காவலர்கள் காலை முதல் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT