ADVERTISEMENT

பொன்னமராவதி சம்பவம்... ஆயிரம் பேர் மீது வழக்கு... திரும்ப பெறக்கோரி முதலமைச்சரை சந்தித்து அமைச்சர் தலைமையில் மனு!

09:09 PM Jun 26, 2019 | kalaimohan

பெண்களை இழிவாக பேசிய ஆடியோ வெளியான விவகாரத்தில் ஆடியோவில் பேசிய நபர்களை கைது செய்யக் கோரி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காவல் நிலையத்தில் ஏப்ரல் 18 ந் தேதி புகார் கொடுத்தனர். அடுத்த நாள் நடவடிக்கை கோரி பொன்னமராவதி சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட சமூக பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் ஆயிரக்கணககில் திரண்டு ஊர்வலமாகச் சென்று காவல் நிலையம், பேருந்து நிலையம் முற்றுகை, சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த தகவல் பரவியதும் பொன்னமராவதிக்குச் செல்லும் அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டு போராட்டம் நடந்தது.

ADVERTISEMENT


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தொடங்கிய போராட்டம் மாவட்டத்தின் பல ஊர்களுக்கும் பரவியதுடன் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் போராட்டமாக வெடித்தது. இந்த நிலையில் ஏப்ரல் 19 ந் தேதி பொன்னமராவதியில் போராட்டத்தின் போது தடியடி, கல்வீச்சு சம்பவங்களும் நடந்தது. இதில் போலிசார் உள்பட பலர் காயடைந்தனர். வாகனங்கள் சேதமடைந்தது. அதன் பிறகு 3 நாட்களுக்கு 49 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டு கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் போலிஸ் வாகனங்கள் உடைப்பு, பொது சொத்துகளை சேதப்படுத்தியது போன்ற காரணங்களால் சுமார் ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் ஆடியோவில் பேசியவர்களை போலிசார் கைது செய்தனர். அதனால் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் முடிவுக்கு வந்து அமைதி திரும்பியது.

இந்த நிலையில் கடந்த மே 30 ந் தேதி நள்ளிரவில் பொன்னமராவதி சுற்றியுள்ள பல கிராமங்களில் நுழைந்த போலிசார் 22 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பிறகு எந்த நேரத்திலும் பொலிசார் கைது செய்ய வருவார்கள் என்ற அச்சத்தில் ஆண்கள் தங்கள் வீடுகளில் தங்காமல் அருகில் உள்ள காட்டுப்பகுதிகளிலும், வெளியூர்களிலும் தங்கி வருகின்றனர். இந்த நிலையில் கைது நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்று சுகாதார துறை அமைச்சரிடம் பொன்னமராவதி பகுதியை சேர்ந்த சமபந்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

ADVERTISEMENT


அதனைத் தொடர்ந்து பொன்னமராவதி பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து ஆயிரம் பேர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு கொடுக்க திட்டமிட்டு அ.தி.மு.க ஒ.செ பழனியாண்டி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ புஸ்பராஜ், ஆகியோர் முன்னிலையில் செவ்வாய் கிழமை மாலை 70 பேர் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர். சென்னையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அனைவருக்கும் காலை உணவு உபசரிப்புகளுக்கு பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் அ.தி.மு.க மா.செ வைரமுத்து உள்பட பொன்னமராவதி பகுதி பிரதிநிதிகள் முதலமைச்சரின் முகாம் அலுவலகம் சென்று முதலமைச்சரை சந்தித்து ஆயிரம் பேர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.


மனுவை பெற்றுக் கொண்ட முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். இது குறித்து முதலமைச்சரை சந்திக்கச் சென்று குழுவினர் கூறும் போது.. பொன்னமராவதி சம்பவத்தில் ஈடுபட்டதாக ஆயிரம் பேர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. அதை முதல்வரிடம் மனுவாக கொடுத்திருக்கிறோம். நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் சொன்னது எங்களுக்கு நிம்மதியாக உள்ளது. முதல்வரை சந்திக்க அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாடு செய்து காலை உணவும் வழங்கினார். இனி கைது நடவடிக்கை இருக்காது என்று நம்புகிறோம் என்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT