Skip to main content

பெண்களை இழிவாக ஆடியோவில் பேசிய மற்றொரு நபர் கைது!

Published on 30/04/2019 | Edited on 30/04/2019

தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த 16 ந் தேதி சுயேட்சை வேட்பாளர் செல்வராஜ் மற்றும் அவர் சார்ந்துள்ள சமூகப் பெண்கள் பற்றி இழிவாக பேசிய ஆடியோ ஒன்று பரவியது. அந்த ஆடியோவால் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தொடங்கி தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் போராட்டம் நடந்தது. இந்த நிலையில் புதுக்கோட்டை மற்றும் தஞ்சை போலிசார் 5 தனிப்படைகள் அமைத்து ஆடியோ வெளியிட்டவர்களையும் அதை பரப்பியவர்களையும் தேடி வந்தனர். ஆனால் எங்கிருந்து ஆடியோ வெளியிடப்பட்டது என்பதை கண்டுபிடிக்க வாட்ஸ் அப் நிறுவனத்தின் உதவியை போலிசார் நாடினார்கள்.

 

ponnamaravathi

 

இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து ஆடியோ வெளியிடப்பட்டது என்பதை அறிந்து சிங்கப்பூரில் இருந்த பட்டுக்கோட்டை கரிசல்காடு கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமாரை இந்திய தூதரகம் மூலம் பிடித்து சென்னை க்கு அனுப்பி வைத்தனர். சென்னை விமான நிலையத்தில் இறங்கியதும். அவரை விமான நிலையத்தில் காத்திருக்க வைத்தனர். பின்னர் பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான விசாரணைக் குழுவினர் செல்வகுமாரை அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதன் அடிப்படையில் பட்டுக்கோட்டை பள்ளிகெண்டான் வசந்த் என்பவரையும் கைது சென்று அன்றே சிறையில் அடைத்தனர். 

 

ponnamaravathi

 

அதன் பிறகு செல்வகுமார் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆடியோவில் பேசிய நபர்களில் ஒருவரான வாராப்பூர் நெரிஞ்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சக்தி என்கிற சத்தியராஜை சிங்கப்பூரில் இரந்து வரவைத்து திருச்சி விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். தொடர்ந்து சம்மந்தப்பட்ட ஆடியோக்களை தமிழ்நாட்டில் பரப்பியதாக தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன் உள்பட 2 பேரையும் கைது செய்தனர். 

 

தொடர்ந்து அன்றே சிங்கப்பூரில் இருந்து ஆடியோவை வெளியில் பரப்பிவிட இந்தியா சிம் கார்டு கொடுத்து வாட்ஸ் அப் கணக்கு தொடங்க கொடுத்த கீரனூர் மோசக்குடி கிராமத்தைச் சேர்ந்த ரெங்கையன் என்பரையும் சிங்கப்பூரில் இருந்து வரவைத்து கைது செய்யப்பட்டார்.

 

ponnamaravathi

 

இந்த நிலையில் இன்று ஆடியோவில் பேசியதாக செல்வகுமார் கொடுத்த வாக்குமூலத்தில் அடையாளம் காணப்பட்ட சித்தன்னவாசல் முருகேசன் என்பரை சிங்கப்பூரில் இருந்து வரவைக்கப்பட்டு புதுக்கோட்டை பொன்னமராவதி போலிசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். இன்று மாலை முருகேசன் திருமயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம்.

 

 

மேலும் இந்த வழக்கில் தொடர்புடையதாக ஆடியோக்களை வெளியில் அனுப்பியதாக கூறப்படும் தஞ்சை மாவட்டத்தைச் சேரந்த ஒரு இளைஞரையும் சிங்கப்பூரில் இருந்து கொண்டு வரும் முயற்சி நடக்கிறது. இன்று அல்லது நாளை அவரும் வரவழைக்கப்பட்டு கைது செய்யப்படலாம். மேலும் இது சம்மந்தமாக தமிழ்நாட்டில் சிலர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.