திருப்பத்தூர் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த பாலு என்பவரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசி என்பவரும் சிறு வயது முதலே கண் பார்வை குறைபாடுள்ளவர்கள். முதுகலைப் பட்டம் பெற்ற இருவரும் பல வருடங்களாகக் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. ஆனால் திருமணம் செய்ய போதிய பொருளாதார வசதி இல்லாததால் இவர்கள் திருமணம் தடைப்பட்டு வந்தது. தகவலறிந்த வடபழனி காவல் நிலைய அதிகாரிகள் இவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர்.
ADVERTISEMENT
வடபழனி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்த் பாபு, முருகன் கோவில் அறநிலையத்துறை அதிகாரிகளின் உதவியுடன் வடபழனி முருகன் கோவிலில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்தார். இதனால் இரு வீட்டாரின் சம்மதத்துடன் பாலு - தமிழரசி திருமணம் இன்று காலை கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. காவல் ஆய்வாளர் ஆனந்த் பாபுவின் ஏற்பாட்டில் உதவி ஆணையர் பாலமுருகன் தலைமையில் நடந்த இந்தத் திருமணத்தில் திருமண தம்பதிக்கு சீர்வரிசைகள், ரூபாய் ஒரு லட்சத்து இருபத்தைந்து ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை வடபழனி காவல்துறை மற்றும் லயன்ஸ் கிளப் சார்பில் திருமண தம்பதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
இந்தத் திருமண விழாவில் 50க்கும் மேற்பட்ட பார்வைத்திறன் குறைபாடு கொண்ட உறவுகள், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் பாலு- தமிழரசி இணையரை வாழ்த்தினர்.
Show comments