Skip to main content

'அம்மாவ பாத்துக்கோ... அக்காவ அழ வேணாம்னு சொல்லு' - இளைஞர் எடுத்த பரிதாப முடிவு

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
'Ammava bathuko... Akkava ala venam sollu'- the young man's pathetic decision

தன்னுடன் திருமணம் நிச்சயக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்த தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் மாலத்தீவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தற்கொலை முடிவுக்காக அவர் நண்பர்களுக்கு அனுப்பியுள்ள உருக்கமான ஆடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி பூங்கொடி இவர்களுக்கு. ராஜேஷ் (31) என்ற மகன் இருந்தார். இவர் மாலத்தீவில் இன்ஜினியராக பணியில் இருந்தார். ராஜேஷுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்த பெற்றோர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் விளாம்பாக்கம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்ற பெண்ணை பார்த்து கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடத்தியிருந்தனர். திருமணத்திற்கான அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கு வழங்கப்பட்டது.

வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி ராஜேஷ் - புவனேஸ்வரிக்கு திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்திற்காக விடுமுறை வேண்டும் என்பதால் மாலத்தீவு சென்று பணியாற்றும் நிறுவனத்தில் விடுமுறை கேட்டுவிட்டு வருவதாக ராஜேஷ் மாலத்தீவு சென்றுள்ளார். மாலத்தீவுக்கு சென்றதால் புவனேஸ்வரியும் ராஜேசும் தொலைபேசியில் பேசி வந்துள்ளனர்.

திருமணத்திற்கு ஒரு மாதமே உள்ள நிலையில் கடந்த 14ஆம் தேதி செல்போனில் ராஜேஷை தொடர்பு கொண்ட புவனேஸ்வரி 'நான் ஏற்கெனவே வேறு ஒருவரை காதலித்து வந்தேன். அவர் தனக்கு தொல்லை கொடுக்கிறார். எனவே நான் இல்லை என்றாலும் நீங்கள் வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும். என அழுதபடி கூறியுள்ளார். இது ராஜேஷிற்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

திருமண அழைப்பிதழ்கள் எல்லாம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், புவனேஸ்வரி சொன்ன இந்த தகவல் அவருக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. அதே நேரம் புவனேஸ்வரி வேறொருவருடன் திருமணம் செய்து கொண்டதாக அவருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக அந்த இளைஞர் வெளியிட்டுள்ள ஆடியோவில், 'காலையிலிருந்து அவங்க வீட்டில் இருக்கிறவர்களுக்கு போன் பண்றேன் யாரும் எடுக்கல. இன்னைக்கு காலையில கேட்டா கல்யாணம் வேற ஒரு பையனோட முடிஞ்சிருச்சுன்னு சொல்றாங்க. என்னால முடியல மச்சான். என்ன பண்ண போறேன்னு எனக்கே தெரியல. இதுல இருந்து எப்படி மீண்டு வர போறேன்னு தெரியல. அம்மாவ பாத்துக்கோ.. அக்காவ அழுவ வேணான்னு சொல்லு. எங்க அப்பாவோட மானம் தான் முக்கியமா இருக்குது. அதை விட பெருசா எதுவும் தெரியல. என்னால் முடியல' என பேசிய அந்த வாட்ஸ் ஆப் ஆடியோ இணையத்தில் வெளியானது.

இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி ராஜேஷ் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றிய மாலத்தீவு போலீசார் உடற்கூறு ஆய்வுக்கு பிறகு இந்திய தூதரகத்திடம் உடலை ஒப்படைத்தனர். இதனையடுத்து ராஜேஷின் உடல் விமானம் மூலம் எடுத்து வரப்பட்டு பின்னர் மேல்மலையனூர் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. உறவினர்கள் அவரது உடலை கண்டு கதறி துடித்த காட்சிகள் கண்ணீரை வரவழைத்தது. இந்த தற்கொலை சம்பவம் அந்த பகுதியில் மிகப் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்றாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.