தமிழகத்தில் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு என்பது தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிற நிலையில், 1.5 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3,585 ஆண் வேட்பாளர்களும், 411 பெண் வேட்பாளர்களும், இரண்டு மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு என்பது விறுவிறு என நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்தமாக சேலம் மாவட்டத்தில் 48.6 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. சேலம் வீரபாண்டி தொகுதியில் மதியம் 1 மணி நிலவரப்படி 53.62 சதவிகிதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளது. ஆனால் அந்த தொகுதியில் உள்ள பல்வேறு வாக்குசாவடிகளில் விதிமீறல்கள் நடைபெறுகிறது. வாக்குசாவடிகளுக்குள் செல்லுபவர்கள் கட்சி துண்டு, கட்சி அடையாளங்களை உள்ளே கொண்டு செல்லக் கூடாது என்ற விதியிருக்கும் நிலையில் சில கட்சியினர் அவற்றை கடைபிடிப்பதில்லை. அந்த வகையில் விதியை மீறி பாமக நிர்வாகி ஒருவர் கட்சி துண்டுடன் உள்ளே சென்று வாக்களிக்க முயன்றதை முதியவர் ஒருவர் தட்டிக்கேட்டுள்ளார். ஆனால் பாமகவை சேர்ந்த அந்த நபர் முதியவர் மீது தாக்குதலில் ஈடுபட்டார். தேர்தல் அதிகாரிகள், காவலர்கள் மத்தியிலேயே இப்படி வாக்குச்சாவடியில் தாக்குதல் சம்பவம் நடந்திருப்பது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.