இந்நிலையில் முருகனை காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி காவல்துறையினர் முடிவு செய்து முயற்சிகளை மேற்கொண்டனர். பின்னர் முருகனிடம் விசாரணை மேற்கொள்ள திருச்சி மாவட்ட குற்றவியல் இரண்டாவது மாஜிஸ்ட்ரேட் திரிவேணி அனுமதியளித்தார். இந்த உத்தரவை பெங்களூரு நீதிமன்றத்தில் தெரிவித்து, முருகனை திருச்சிக்கு காவல்துறையினர் அழைத்து வந்தனர்.
பின்னர் திருச்சி காஜாமலை அருகே உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் வசிக்கும் இரண்டாவது மாஜிஸ்ட்ரேட் முன்பு முருகனை காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். அவனை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதையடுத்து, முருகன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.
இதற்கிடையில் திருச்சி மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தும் போது முருகன் செய்தியாளரிடம்,' எனக்கு நிறைய திறமை உள்ளது. நான் கண்டிப்பாக வாழ்க்கையில் வெற்றி பெறுவேன். நான் எந்த வேலை கொடுத்தாலும் செய்வேன். நான் ஒரு நல்ல படத் தயாரிப்பாளர். என் வாழ்க்கையில் சிறை அனுபவம் நிறைய உள்ளது' தத்துவம் பேச ஆரம்பித்து இருப்பது போலீசாருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் கொள்ளை நடந்து 55 நாட்களுக்கு பிறகு திருச்சி போலீசிடம் சிக்கியிருக்கும் முருகனை காவலில் எடுக்கக் கோரும் மனுவை நீதிமன்றத்தில் இன்று திருச்சியில் காவல்துறையினர் தாக்கல் செய்ய உள்ளனர். ஏற்கனவே முருகன் தன்னுடைய தொடர் கொள்ளையில் போலீஸ் தலையீடாமல் இருப்பதற்கு காவல்துறை அதிகாரிகளுக்கு இலஞ்சமாக கார், இலட்ச கணக்கில் பணம், நடிகைக்கு நகை என்று கொடுத்தது எல்லாம் வெளியே வருமே என்கிற பீதியில்தான் போலீசார் கலக்கம் அடைய காரணம் என்கிறார்கள் விவரம் தெரிந்த போலீசார்.