ADVERTISEMENT

கடலில் கலந்த எண்ணெயில் கலந்திருப்பது என்ன? வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

10:10 AM Dec 14, 2023 | kalaimohan

சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய்க் கழிவுகள் சுமார் 20 சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு படர்ந்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு படர்ந்திருக்கும் எண்ணெய்க் கழிவுகளை அகற்றவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து தாமாக முன்வந்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

மெரினா கடற்கரை வரை தற்பொழுது அந்த எண்ணெய் படிவுகள் படர்ந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மெரினா மற்றும் பட்டினம்பாக்கம் கடற்கரை பகுதிகளில் கடல் அலையில் கால்களை வைத்து விளையாடியவர்களின் பாதத்தில் எண்ணெய் துளிகள் ஒட்டிக்கொண்டது. இது தொடர்பாக வீடியோக்கள் எடுத்த சுற்றுலா பயணிகள், அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். காலில் ஒட்டிய அந்த எண்ணெய் படலம் எவ்வளவுதான் கழுவினாலும் போகவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் கொசஸ்தலை ஆற்றில் ஆய்வு செய்ததில் அதிக அளவு ஃபீனால், கிரீஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு எண்ணுரின் கொசஸ்தலை ஆற்றின் கழிமுகப்பகுதியில் குறிப்பாக பக்கிங்காம் கால்வாயில் சிபிசிஎல் தொழிற்சாலைக்கு தெற்கு புறத்தில் உள்ள நீர் மாதிரிகளை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எடுத்து பகுப்பாய்வு செய்தது. அந்த ஆய்விற்கான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் அதிர்ச்சி தரும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. எண்ணூர் கழிமுகத்தில் கலந்த எண்ணெய் கலவையில் அதிக அளவில் ஃபீனால் மற்றும் கிரீஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கச்சா எண்ணெயாக அல்லது சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களாக இருக்கலாம் என தெரிய வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் மாதிரிகளை ஆய்வு செய்த பொழுது ஒரு லிட்டருக்கு 48 கிராம் அளவிற்கு ஃபீனால் இருப்பது தெரியவந்துள்ளது. 10 கிராமில் ஒரு கிராம் அளவிற்கு பெட்ரோலிய பொருட்கள் இருப்பதும், ஒரு லிட்டரில் 728 மில்லி கிராம் அளவிற்கு பெட்ரோலிய பொருட்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT