ADVERTISEMENT

''நிலுவையிலுள்ள ஊதியம் உடனடியாக வழங்கப்படும்''-அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேட்டி!

09:24 PM Oct 10, 2021 | kalaimohan

ADVERTISEMENT

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் நன்கொடையுடன் ரூ 80 லட்சம் மதிப்பீட்டில் நிமிடத்திற்கு 600 லிட்டர் உற்பத்தித் திறன்கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி கலனை தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

அதைத் தொடர்ந்து நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, ''தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலையின் போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது. தற்போது மூன்றாவது அலை வரும் எனக் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வரின் முயற்சியின் காரணமாக மத்திய அரசுக்குக் கொடுத்த அழுத்தத்தின் பேரில் தமிழகத்தில் இதுவரை 222 ஆக்சிஜன் உற்பத்தி கலன் அமைக்கப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் தற்காலிக பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்ட செவிலியர்கள், உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் இரண்டு மற்றும் மூன்று மாதம் வேலை பார்த்து இருந்தாலும் அவர் களை வருகின்ற டிசம்பர் 31-ஆம் தேதி வரை தொடர்ந்து பணியில் அமர்த்தும்படி தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அவர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியம் உடனடியாக வழங்கப்படும். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட இந்த ஆக்ஸிஜன் கலன் மூலம் தினந்தோறும் 2 மெட்ரிக் டன் அளவு ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும். 331 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து டெங்கு முன்னெச்சரிக்கை பணிகளான அபேட் மருந்து தெளித்தல், புகை மருந்து உள்ளிட்ட பல்வேறு தடுப்பு பணிகளில் மக்கள் நல்வாழ்வுத் துறை இணைந்து செய்து வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் தாராளமாகத் தடுப்பூசி கிடைத்தபோதும் 63 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டது .ஆனால் தற்போது திமுக ஆட்சியில் நாலரை மாதத்தில் 5 கோடியே 3 லட்சம் தடுப்பூசிகள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக 5 மெகா தடுப்பூசி முகாம் தமிழகத்தில் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இதுவரை முதல் தவணை தடுப்பூசி 66 முதல் 67 சதவீதம் மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் நேற்று மாலை வரை முதல் தவணை தடுப்பூசி 64 சதவீதம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது'' என்று கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT