விவசாய நிலத்தில் மின்னழுத்த கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு குடும்பமே தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் நிகழ்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சேவகானுபள்ளி என்ற கிராமத்தை சேர்ந்தவர் எல்லா ரெட்டி. இவருடைய விவசாய நிலத்தில் உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்கும் பணிக்காக பொக்லைன் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு குழி தோண்டப்பட்டு வந்தது. ஆரம்பத்திலிருந்தே இதற்கு விவசாயி எல்லா ரெட்டி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் போலீசார் பாதுகாப்பில் அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென அங்கு வந்த எல்லா ரெட்டி குடும்பத்தினர் விஷ பாட்டிலை எடுத்துக்கொண்டு குழிக்குள் இறங்கி தற்கொலைக்கு முயன்றனர்.
'மின்கோபுரம் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிட்டோம். ஆனால் எங்களுக்கு உதவ யாருமே இல்லை' என கூச்சலிட்டு கத்தினர். உடனடியாக அவர்களை மீட்ட போலீசார், குடும்ப உறுப்பினர் சிலரை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.