ADVERTISEMENT

கல்லால் தாக்கி மூதாட்டி படுகொலை; நிர்வாண நிலையில் சடலம் மீட்பு

08:10 AM May 14, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பள்ளிபாளையம் அருகே, குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை மர்ம நபர்கள் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர். அந்த வீட்டிலிருந்து நிர்வாண நிலையில் மூதாட்டியின் சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஆனங்கூரைச் சேர்ந்தவர் பழனியம்மாள் (64). இவர், காடச்சநல்லூர் அருகே உள்ள பில்லுமடைக்காடு பகுதியில் குத்தகைக்கு விவசாய நிலம் வாங்கி இருந்தார்.

அந்த நிலத்திலேயே குடிசை போட்டு தங்கிக் கொண்டு, கால்நடை வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அத்துடன், வட்டித்தொழிலும் செய்து வந்தார். மே 12ம் தேதி காலை வெகுநேரமாகியும் பழனியம்மாள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு திறந்து விடாததோடு, குடிசை கதவும் சாத்தப்பட்ட நிலையிலேயே இருந்துள்ளது. அந்தப் பகுதியில் வசித்து வரும் விவசாயிகள் சிலர் பழனியம்மாளைத் தேடி குடிசைக்குச் சென்றனர். அங்கு பழனியம்மாள் நிர்வாண நிலையில் சடலமாகக் கிடந்தார்.

அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவல் ஆய்வாளர் சந்திரகுமார் மற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்தனர். அவர்கள் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மர்ம நபர்கள் பழனியம்மாளின் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர். நிர்வாணமாக சடலம் கிடந்ததால், கொலையாளிகள் அவரை பாலியல்வன்கொடுமை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காவல்துறை மோப்ப நாய் ஸ்டெபியை நிகழ்விடத்திற்கு அழைத்து வந்தனர். ஆனால் மோப்ப நாய் சந்தேகத்திற்குரிய யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. நிகழ்விடத்தில் இருந்து ஓடிய ஸ்டெபி, முதன்மைச் சாலை வரை ஓடிச்சென்று, பிறகு அங்கேயே நின்று விட்டது. கொலையாளிகள் அந்த இடத்தில் கடைசியாக நின்று பேசிவிட்டு, கலைந்து சென்றிருக்கக் கூடும் எனத்தெரிகிறது.

மாவட்ட காவல்துறை எஸ்பி கலைச்செல்வன், டிஎஸ்பி மகாலட்சுமி ஆகியோரும் நிகழ்விடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, பள்ளிபாளையம் அருகே ஓடப்பள்ளியைச் சேர்ந்த பாவாயம்மாள் என்பவரை, பாப்பம்பாளையம் அருகே கரும்புத் தோட்டத்தில் வைத்து மர்ம நபர்கள் கொலை செய்தனர். அவரும் வட்டித்தொழில் செய்து வந்தார். மேலும், கொலையான போது அவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருக்கலாம் என அப்போது சந்தேகிக்கப்பட்டது. அதேபோன்ற உத்திதான் தற்போது பழனியம்மாள் கொலையிலும் மர்ம நபர்கள் பயன்படுத்தி உள்ளனர்.

இன்னும் பாவாயம்மாள் கொலை வழக்கிலேயே குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தற்போது மற்றொரு அதே பாணியில் மற்றொரு பெண் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பள்ளிபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT