Skip to main content

தாயும் மகனும் எடுத்த விபரீத முடிவு; வீடு திரும்பிய தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

dharmapuri ottapatti village mother and son incident

 

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள ஒட்டப்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் (வயது 65). இவர் ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர். இவருக்கு சாந்தி (வயது 50) என்ற மனைவியும், விஜய் ஆனந்த் (வயது 30) என்ற மகனும் உள்ளனர். இன்ஜீனியரான விஜய் ஆனந்துக்கு இன்னும் திருமணமாகாமல் இருந்துள்ளார். இந்நிலையில் பழனிவேல் கடந்த சனிக்கிழமை உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்காக, பாலக்கோடு சென்றுள்ளார். அதன் பின்னர் திருமண நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கதவைத் தட்டியும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை.

 

இதனால் சந்தேகம் அடைந்து பழனிவேல், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது படுக்கை அறையில் மனைவி சாந்தி மற்றும் மகன் விஜய் ஆனந்த் இருவர் முகத்தில் பிளாஸ்டிக் கவர் சுற்றிய நிலையில் இறந்து கிடந்துள்ளனர். மேலும் அவர்களுக்கு அருகிலேயே இரண்டு கேஸ் சிலிண்டர்கள் திறக்கப்பட்ட நிலையில் இருந்தது. அந்த சிலிண்டர்களில் இருந்து குழாய் ஒன்று இருவரின் தலையைச் சுற்றிய பாலிதீன் கவருக்குள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து சோதனை செய்தபோது, அவர்கள் உயிரிழந்து கிடந்த அறை முழுவதும் விஷவாயு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கு இருந்த ஜன்னலில் 'உடனடியாக ஜன்னலை உடைத்து விட்டு, போலீசை அழைத்து வாருங்கள்' என பேப்பரில் எழுதி ஒட்டப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் ஜன்னல் கதவுகளைத் திறந்து விட்டுள்ளனர். மேலும் திறந்த நிலையில் இருந்த கேஸ் சிலிண்டரை மூடி உள்ளனர்.

 

இதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட சோதனையில், விஜய் ஆனந்த் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று கிடைத்தது. அந்த கடிதத்தில், "நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஜவுளி தொழில் செய்து வந்தேன். அதற்காக 25 லட்சம் ரூபாய் கொடுத்திருந்தேன். ஆனால் நண்பர்கள் என்னை ஏமாற்றியதோடு, நான் கொடுத்த பணத்தையும் திருப்பித் தராமல், பல்வேறு முறைகளில் மன உளைச்சலை ஏற்படுத்தினர். இதுபற்றி காவல்துறை அதிகாரிகள் விரைவாகத் தீர்வு காண வேண்டும் என உங்கள் பாதங்களை வணங்கி கேட்டுக்கொள்கிறேன்" என இருந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த அருண் (வயது 36) மற்றும் கார்த்திக் (வயது 34) ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.