ADVERTISEMENT

தேர்தல் முன்விரோதம்; முதியவரை அடித்து கொன்ற ஊராட்சி மன்றத் தலைவர் குடும்பம்! 

11:45 AM May 13, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகேயுள்ள எடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெரியசாமி, ஜோதிவேல். கடந்த உள்ளாட்சித் தேர்தலில், பெரியசாமி மகன் சிவக்குமார் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஜோதிவேலின் மருமகள் மணிமேகலை ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் இரு குடும்பத்திற்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு எடையூரில் ஒரு துக்க நிகழ்விலும், இருவருக்கும் சண்டை வந்துள்ளது. ஊர் பொதுமக்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.


இந்நிலையில், நேற்று மதியம் பெரியசாமி மற்றும் அவருடைய இரண்டாவது மகன் கோபி மற்றும் மருமகள் சங்கீதா மூவரும் வீட்டில் இருந்த போது அங்கு வந்த ஜோதிவேல், அவருடைய மகன் அஜெய், ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை மற்றும் இவர்களது உறவினர்கள் 6 பேர் கொண்ட கும்பல், பெரியசாமி குடும்பத்தினரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் அவரது மகன் கோபி மற்றும் மருமகள் சங்கீதா ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பெண்ணாடம் போலீசார் பெரியசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குp பதிவு செய்து ஜோதிவேல் மற்றும் அவருடைய உறவினர்களை தேடி வருகின்றனர்.

தேர்தல் முன்விரோதத்தால் கொலை நடந்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT