ADVERTISEMENT

சேலத்தில் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்; கேரளாவை சேர்ந்தவர்கள் உள்பட 7 பேர் பலி; 38 பேர் பலத்த காயம்

01:48 PM Sep 01, 2018 | elayaraja


ADVERTISEMENT


சேலத்தில் நள்ளிரவில் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக பலியாயினர். பலத்த காயம் அடைந்த 38 பேருக்கு சேலம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT


சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரவிந்த் பஸ் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான தனியார் பேருந்து, நாற்பதுக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து 24 பயணிகளுடன் யாத்ரா டிராவல்ஸ் என்ற படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்து சேலம் வழியாக கொச்சின் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.


நள்ளிரவு 1.15 மணியளவில் (ஆகஸ்ட் 31 - செப். 1, 2018), சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, சேலம் குரங்குசாவடி அருகே சாலையோரமாக பழுதாகி நின்ற பொலீரோ பிக்அப் வேன் மீது பலமாக மோதியது. இதில் அந்த வேன் நிலைகுலைந்தது.


அந்த வேன் குண்டு மல்லி பூக்களை பாரம் ஏற்றிக்கொண்டு பெங்களூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது டயர் பஞ்சரானதால் சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இண்டிகேட்டர் விளக்குகள் போடப்பட்டு இருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. சேலத்தில் இருந்து சென்ற தனியார் பேருந்து வேன் மீது மோதிய வேகத்தில் சாலையின் குறுக்கே உள்ள தடுப்புகளை உடைத்துக்கொண்டு, அடுத்த பக்கமுள்ள சாலையில் பாய்ந்து சென்று மீண்டும் சேலத்துக்குச் செல்லும் வழியை நோக்கி திரும்பி நின்றது.


இதை சற்றும் எதிர்பாராத பெங்களூரில் இருந்து மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து, விபத்தில் சிக்கிய பேருந்து மீது அசுர வேகத்தில் மோதியது. அதே வேகத்தில் அந்த ஆம்னி பேருந்து சர்வீஸ் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.


பெங்களூரில் சாப்ட்வேர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் வார விடுமுறையைக் கழிக்க சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக இரவு 9.30 மணியளவில் ஆம்னி பேருந்தில் ஏறியுள்ளனர். அதனால் பலரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்துள்ள நேரத்தில்தான் இந்த கோர விபத்து நடந்துள்ளது.


இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்களில் 2 பேர் பெண்கள். சேலம் சாலை விபத்தில் கேரளாவை சார்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்குபேர் பலியாகியுள்ளனர்.

சிறுவன் மட்டும் காயமின்றி உயிர் பிழைத்தான். சிறுவன் ஈத்தனின் தாத்தா மோன்சி ஜோசப்,

பாட்டி அல்போன்சா, தந்தை சிஜி வின்செண்ட், தாய் பினு மேரி வின்செண்ட் ஆகிய நான்கு பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஏற்கனவே இருவரின் அடையாளம் தெரிய வந்துள்ளது. இவர்களுடன் சேர்த்து மொத்தம் 6 பேரின் சடலம் அடையாளம் காணப்பட்டு உள்ளது.


ஒருவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.


விபத்து நடந்தது நள்ளிரவு நேரம் என்பதோடு இறந்தவர்கள் பற்றிய விவரங்களை உடனடியாக சேகரிக்க முடியாமல் காவல்துறையினரும் தடுமாறினர். இதனால் உறவினர்களுக்கு தகவல் அளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுநர் சுரேஷ்குமாரும் (40) பலத்த காயம் அடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணித்தவர்களில் 38 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் 17 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 21 பேர் கருப்பூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.


சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்கள் விவரம்:


1. சுரேஷ்குமார் 2. பழனியம்மாள் (தர்மபுரி) 3. பாலச்சந்திரன் (பெங்களூர்) 4. ஷீலா (கேரளா&பாலக்காடு) 5. ஏஞ்சல் (கேரளா) 6. தாமஸ் (கிருஷ்ணகிரி) 7. ஆன்சில் (கேரளா) 8. லஹரி (கேரளா) 9. விமலா (தர்மபுரி) 10. ஜாய்ஸ் (தர்மபுரி) 11. பிரதீப் (கேரளா) 12. கோபாலகிருஷ்ணன் (பெங்களூர்) 13. திலீப் (நல்லம்பள்ளி) 14. எபின் ஆப்ரஹாம் (கோட்டயம்) 15. சந்திரன் (கேரளா) 16. கேம்ப் (கேரளா) 17. அடையாளம் தெரியாத ஆண் குழந்தை.


விபத்தில் காயம் அடைந்தவர்களை நேரில் பார்க்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அதிமுக எம்பி பன்னீர்செல்வம், எம்எல்ஏக்கள் வெங்கடாசலம், சக்திவேல் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை விவரங்களைக் கேட்டறிந்தனர். சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கரும் நேரில் வந்து சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார். இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT