இந்திய தொழில் கூட்டமைப்பின், தென் மண்டல பிரிவால் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தக்ஷின் - தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டின் (Dakshin South India Media and Entertainment Summit) இறுதி நாளான இன்று (10/04/2022) மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தலைவர் நாசர், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் நடிகர்கள், நடிகைகள் கலந்துக் கொண்டனர்.
மாநாட்டில் பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், "இந்தியாவில் எங்கிருந்தாலும் இந்தியாதான், இதில் வட இந்தியா, தென்னிந்தியா என்று இல்லை. தமிழ் திரைப்படங்களைப் போலத்தான் மலையாள படமும், மற்ற திரைப்படங்களும். ஏழு ஆண்டுகளுக்கு முன் நான் மலேசியா சென்றிருந்த போது ஒருவர் தனக்கு வட இந்திய திரைப்படங்கள் பிடிக்கும் என்றார். வட இந்திய படங்கள் பிடிக்கும் எனக் கூறியவர், தென்னிந்திய படங்களைப் பார்த்தாரா என்று எண்ணத் தோன்றியது" எனத் தெரிவித்தார்.
நடிகர் நாசர் பேசுகையில், "இந்தி சினிமாவில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் நிறைய உள்ளது. ஒரு சினிமா என்பது மொழி சார்ந்த எல்லையோடு இல்லாமல், பிறமொழி சார்ந்தவர்களின் திறனையும் பகிர வேண்டும். கற்றலில் இருக்கும் செல்வம் வேறு எதிலும் இல்லை" எனக் கூறினார்.