இதில் தத்துவப்ரியா, அவரது தங்கை நித்ய நந்திதா ஆகிய இருவரும் காணொலி காட்சி மூலம் ஆஜரானார்கள். இந்த மனுவை விசாரித்த, அகமதாபாத் உயர்நீதிமன்றம்,ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் தங்கி இருக்கும் நாட்டின் இந்திய தூதரகத்தில் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்போது மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான பார்படாஸ் நாட்டில் இருந்து வாக்குமூலமும் தாக்கல் செய்தனர். இந்தியாவுக்கு வர விரும்பவில்லை என்றும் தங்களது தந்தை ஜனார்த்தன சர்மாவால் தங்களுக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்தனர். தாங்கள் தற்போது சுதந்திரமாக, மகிழ்ச்சியாக இருப்பதாகவும் உறுதியளித்தனர். இதனையடுத்து மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான பார்படாஸ் தீவில் இருந்து வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளதால் நித்தியானந்தா மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான பார்படாஸ் தீவில் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதனால் நித்தியானந்தா, நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடு தப்பிச் சென்று இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
இந்த நிலையில் மத்திய அரசு, வெளிநாட்டில் இருக்கும் நித்யானந்தாவை பிடித்து வர உள்ளதாகவும் அறிவித்துள்ளது. அகமதாபாத்தின் ஹதிஜன் பகுதியில் நித்யானந்தா நடத்தி வந்த ஆசிரமத்தில் 2 சிறுமிகள் கடத்தப்பட்டதாக எழுந்த புகாரில் நித்யானந்தா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் அந்த ஆசிரமம் சர்ச்சைக்குரிய பள்ளியை நடத்திவரும் கலோரெக்ஸ் அறக்கட்டளையிடம் இருந்து சட்டவிரோதமாக குத்தகைக்கு பெறப்பட்டுள்ளதாக ஆமதாபாத் நகர மேம்பாட்டு ஆணையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆணைய அதிகாரிகள் நேற்று அந்த ஆசிரமத்தை இடித்து தள்ளினர். உரிய சட்டப்படியும், காவல்துறைக்கும் கல்வித் துறைக்கும் தகவல் தெரிவித்துவிட்டு ஆசிரமம் இடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.