தேசிய வாக்காளர் தினம் சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 25- ந்தேதி நடந்தது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்ற அந்த கூட்டத்தில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, சென்னை மாவட்ட ஆட்சிய சீதாலெட்சுமி, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். மேலும் பள்ளி மாணவ- மாணவியர்களும் பெருமளவில் திரண்டிருந்தனர்.
இக்கூட்டத்தில் மைக் பிடித்த தலைமைச்செயலாளர் சண்முகம் தேர்தல் நடத்தைகள், சீர்த்திருத்தங்கள், தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டியதன் அவசியம் என பல்வேறு விசயங்களைச் சுட்டிக்காட்டிவிட்டு, ‘’மக்களாட்சி முறையில் சீர்கேடுகள் வருவதற்கு காரணமே மக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை என்பதுதான். அவைகள் மெல்ல மெல்ல மாறி வருகிறது. முன்பெல்லாம் வாக்குப்பதிவு சதவீதம் குறைவாக இருக்கும். தற்போது வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது நல்ல ஒரு மாற்றம். ஆனாலும், தேர்தலில் மக்களின் ஈடுபாடுகளில் மாற்றம் வரவேண்டும். நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்கிற எண்ணம் வரவேண்டும்.
கட்சியிலுள்ள நம்முடைய ஆட்கள் சொல்ல முடியாத தகவல்களையா அரசியல் ஆலோசகர்கள் சொல்லிவிடப் போகிறார்கள்? மக்களுக்கு என்ன தேவை என்பதை மக்களிடம் போய் கேட்டாலே தெரிந்துவிடும். அதனை செய்யாமல் இதற்காக ஒருவரை அழைத்து வந்து, அவரை அரசியல் ஆலோசகராக நியமித்து, அவர் ஆய்வு செய்து சொல்வதும், அதற்கேற்ப அரசியல் நடத்துவதும் இப்போது நடக்கிறது ’’ என தற்கால அரசியல் குறித்து விளக்கமாகப் பேசினார் தலைமைச்செயலாளர் சண்முகம்.
அந்த வகையில் கடந்த 2016 தேர்தலில் அரசியல் ஆலோசகர் என்கிற கான்செப்ட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்காகவும், பாமக அன்புமணிக்காகவும் தனித்தனி டீம் களமாடியது. தற்போது அந்த கான்செப்ட்டில் திமுகவுக்காக களமிறங்கியிருக்கிறது பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம். திமுகவின் அரசியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டிருப்பதாக திமுகவே ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் அரசியல் ஆலோசகர் என தலைமைச்செயலாளர் சண்முகம் தாக்கிப் பேசியிருப்பது திமுகவின் கார்ப்பரேட் கான்செப்டை மனதில் வைத்துதான். தலைமைச்செயலாளராக இருப்பவர் பிரதான எதிர்க்கட்சியின் அரசியலை மறைமுக தாக்கியிருக்கிறாரே என அதிகாரிகளுக்கெல்லாம் அதிர்ச்சிதான் ‘’என விவரித்தனர்.