ADVERTISEMENT

நடராஜன் மறைவு - மு.க.ஸ்டாலின், கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

11:21 AM Mar 20, 2018 | Anonymous (not verified)


உடல்நலக்குறைவால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சசிகலா கணவர் நடராஜன் காலமானார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் சிறுநீரகம் செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் நடராஜன் சிகிச்சை எடுத்தார். அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே நடராஜனுக்கு கடந்த 16-ம் தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக சென்னை குளோபல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நடராஜன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவக்குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் நடராஜன் இன்று அதிகாலை 1 மணி 35 நிமிடங்களுக்கு உயிரிழந்தார். நடராஜனின் உடல் இறுதி அஞ்சலிக்காக அவரின் பெசன்ட் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

ADVERTISEMENT


நடராஜனின் உடலுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் கூறும்போது, புதிய பார்வை இதழின் ஆசிரியர் நடராஜன் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவர், மாணவர் பருவத்தில் இருந்தபோதே தமிழ்மொழிக்கான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தனது உணர்வை வெளிப்படுத்தியவர். கலைஞர் மீது அன்பு கொண்டவராகவும், திராவிட இயக்கத்தின் மீது அளவுகடந்த பற்று கொண்டவராக விளங்கியவர். அவரை இழந்து வாடிக் கொண்டிருக்க கூடிய அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.


திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நடராஜனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அளித்த பேட்டியில், ‘நடராஜனின் மறைவு அவரது குடும்பத்திற்கு, திராவிட இயக்கங்களுக்கு பேரிழப்பு. நடராஜனின் நினைவைப் போற்றும் வகையில் முள்ளிவாய்க்கால் முற்றம் என்றும் இருக்கும்’ என தெரிவித்தார்.

நடராஜனின் உடலுக்கு நாஞ்சில் சம்பத் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் கூறும்போது, ஒன்றரைக் கோடி தொண்டர்களைக் கொண்ட மாபெரும் இயக்கத்தின் உந்துவிசையாக இருந்தவர். நாலாவது தமிழீழ போரில் மடிந்த மாவீரர்களுக்கு முள்ளிவாய்க்கால் முற்றம் கண்ட ராஜராஜசோழன் காலமாகிவிட்டார். அவரை இழந்துத் தவிக்கிற எங்கள் சின்னம்மாவுக்கும் அவரது குடும்பத்திற்கும் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன் என தெரிவித்தார். மேலும், நல்லக்கண்ணு, தா.பாண்டியன் உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT