ADVERTISEMENT

பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டிய மர்ம நபர்; மருத்துவமனையில் பரபரப்பு

11:00 AM Aug 01, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலத்தில், தனியார் மருத்துவமனை குளியல் அறையில் குளித்த பெண்ணை ரகசியமாக அலைபேசியில் படம் பிடித்த மர்ம நபர், கூப்பிடும் இடத்திற்கு வராவிட்டால் குளியல் காட்சிகளை இணையத்தில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் பெரிய வீராணத்தைச் சேர்ந்தவர் சிவராமன் (45). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கவிதா (40). (கணவன், மனைவி இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டு உள்ளன). கடந்த பத்து நாட்களுக்கு முன்பு சிவராமனுக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர், சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அப்போது மருத்துவமனையிலேயே தங்கியிருந்து கவிதா, தன் கணவரைக் கவனித்துக் கொண்டார். இரண்டு நாள் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த சிவராமன் உடல்நலம் தேறிய பின் வீடு திரும்பினார். இந்நிலையில் அவருடைய மனைவியின் அலைபேசிக்கு மர்ம நபர் ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்து.

எதிர் முனையில் பேசியவர், “நீ மருத்துவமனையில் இருந்தபோது அங்குள்ள குளியலறையில் குளித்த காட்சிகளை ரகசியமாக கேமராவில் பதிவு செய்து வைத்துள்ளேன். அந்த காணொளி காட்சிகளை அழிக்க வேண்டுமானால் நான் கூப்பிடும் இடத்திற்கு தனியாக வர வேண்டும். அவ்வாறு வராவிட்டால் இணையதளத்தில் காணொளிக் காட்சிகளை பதிவேற்றம் செய்து விடுவேன்” என்று மிரட்டியுள்ளார். மேலும், கவிதாவின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு மர்ம நபர் அந்தக் காணொளிக் காட்சிகளை அனுப்பி வைத்துள்ளார். அதைப் பார்த்த கவிதாவும், குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

கலக்கம் அடைந்த கவிதா, இதுகுறித்து சேலம் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். முதல் கட்ட விசாரணையில், மர்ம நபர் இரண்டு வேறு வேறு எண்களில் இருந்து பேசியிருப்பது தெரிய வந்தது. தான் மருத்துவமனையில் இருந்தபோது, பக்கத்து படுக்கையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர், தான் குளிக்கும்போது மறைந்து இருந்து அலைபேசி கேமரா மூலம் பதிவு செய்திருக்கலாம் என காவல்துறையில் கூறியுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் சந்தேகத்திற்குரிய அந்த நபர் மற்றும் கவிதாவின் கணவர் சிகிச்சையில் இருந்தபோது அந்த மருத்துவமனையில் பணியாற்றிய ஊழியர்கள், உள்நோயாளியாக சிகிச்சை பெற்றவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர். அதேநேரம், மர்ம நபர் பேசிய அலைபேசி எண்கள் ஆகியவற்றின் மூலமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT