ADVERTISEMENT

ஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல் நிபுணர்!

11:08 PM Feb 18, 2019 | elayaraja


ஆணவக்கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்த தடய அறிவியல் நிபுணர், சிபிசிஐடி காவல்துறை அளித்த தடயங்களில் படிந்திருந்தது கோகுல்ராஜின் ரத்தம்தான் என்பதை உறுதி செய்து, நாமக்கல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (பிப்ரவரி 18, 2019) சாட்சியம் அளித்தார்.

ADVERTISEMENT


சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி வாலிபர் கோகுல்ராஜ் (23), கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக புகார்கள் கூறப்பட்டன. நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜின் சடலம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கை நாமக்கல் மாவட்ட சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கோகுல்ராஜை திட்டமிட்டு கொலை செய்ததாக, சங்ககிரி தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

ADVERTISEMENT


கைதானவர்களில் இருவர் தவிர, மற்ற 15 பேரும் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வரும் சாட்சிகள் விசாரணையின்போது ஆஜராகி வருகின்றனர். நீதிபதி இளவழகன் முன்னிலையில் அரசுத்தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.


இந்நிலையில், அரசுத்தரப்பு சாட்சிகளிடம் இன்று (பிப்ரவரி 18, 2019) மீண்டும் விசாரணை நடந்தது. முதல் சாட்சியாக திருவள்ளூர் மாவட்ட தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் நளினா ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவருடைய சாட்சியம்.


''கோகுல்ராஜின் சடலத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதாக டிரவுசர் (பேன்ட்) (1), சட்டை (2), பணியன் (3), ஜட்டி (4), கிழிந்த நிலையில் கிடந்த பணியன் துண்டுகள் சில (5), சடலம் கிடந்த இடத்தில் ரத்தம் தோய்ந்திருந்த சில கற்கள் (6) ஆகிய ஆறு தடயங்களை காவல்துறையினர் தடய அறிவியல் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இவற்றில் 3, 4, 5 ஆகிய மூன்று இனங்களில் படிந்திருந்த ரத்தக்கறைகள் அவற்றின் தன்மையை இழந்து இருந்தன.


மேலும், 1 மற்றும் 6 ஆகிய இனங்களில் படிந்திருந்த ரத்தக்கறைகள் மனித இனத்தைச் சார்ந்ததுதான் என்றாலும், அவை என்ன வகை என்று எங்களால் அறுதியிட்டுக் கூற இயலவில்லை. இனம் 2ல் (சட்டை) படிந்திருந்த ரத்தக்கறை, மனித ரத்தம்தான். அது, 'ஓ குரூப்' வகையைச் சார்ந்தது எனவும் கண்டறியப்பட்டது. இந்த வகையும், இந்த வழக்கில் தொடர்புடைய இறந்த நபரின் ரத்த மாதிரியும் இரண்டும் 'ஓ குரூப்' என்ற ஒரே வகையைச் சேர்ந்தது என்றும் ஆய்வில் தெரிய வந்தது,'' என்றார் நளினா.


இதையடுத்து ஓமலூரைச் சேர்ந்த ரங்கநாதன், பாஸ்கரன், செல்வமணி என்ற பெண், மாதேஷ் ஆகியோரும் சாட்சியம் அளித்தனர். இவர்களில் அரசுத்தரப்பு சாட்சியமான மாதேஷ் மட்டும் பிறழ் சாட்சியம் ஆனார். அவரிடம் அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி குறுக்கு விசாரணை நடத்தினார். இத்துடன் இன்றைய சாட்சிகள் விசாரணை முடிந்தது. இதையடுத்து சாட்சிகள் விசாரணையை நாளை மறுதினத்திற்கு (பிப்ரவரி 20ம் தேதி) ஒத்திவைத்தார் நீதிபதி இளவழகன்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT