ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, பின்பு அதற்கு இடைத்தேர்தலையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 31ல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, பிப்ரவரி 7 நிறைவடைகிறது. வாக்குப்பதிவு பிப்ரவரி 27 என்றும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்தல் பணிகள் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுன்னி, தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் ஆகியோரது கண்காணிப்பில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் மின்னணு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 500 மின்னணு இயந்திரங்களில் 5 சதவீத இயந்திரங்களில் இந்த மாதிரி வாக்குப்பதிவு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுன்னி முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்ட இந்த மாதிரி வாக்குப்பதிவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.