ADVERTISEMENT

அமைச்சர்களின் புகாரும்... காவல்துறையின் திடீர் எச்சரிக்கையும்...

07:52 AM Feb 07, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்ததை அடுத்து விடுவிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு புறநகர் பகுதியான தேவனஹல்லி அருகே உள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். வரும் பிப். 8 ஆம் தேதி காலை 9 மணிக்கு சசிகலா தமிழகம் கிளம்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வெளியே சென்றபோது அவரது காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது குறித்து சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து சேலம் நகர அதிமுக நிர்வாகிகள் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக் கூடாது என அதிமுக சார்பில் டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் மீண்டும் டிஜிபியை நேரில் சந்தித்து அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக் கூடாது எனப் புகாரளித்தனர்.

இந்த புகாருக்கு பின் அமைச்சர்களுடன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ''சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனைபெற்ற சசிகலா சென்னை திரும்புவதில் எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால் சசிகலாவும், தினகரனும் தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுகின்றனர். டிஜிபியிடம் அல்ல முப்படை தளபதிகளிடம் புகாரளித்தாலும் எங்களை தடுக்க முடியாது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பையே அவமதிக்கும் வகையில் சசிகலா செயல்படுகிறார். அதிமுக கொடியை சசிகலா பயன்டுதகூடாது. மனித வெடிகுண்டாக மாறி மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அவரது சதித்திட்டத்திற்கும் அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது'' என்றார்.

அமைச்சர்களின் இந்தப் புகாரை அடுத்து, பொது அமைதியை பாதிக்கும் நோக்கில் செயல்படும் அரசியல் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. குறிப்பிட்ட சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் அரசியல் நோக்கங்களுக்காக பிற அமைப்பினரை போல தங்களை பாவித்துக்கொள்வதாக காவல்துறை வெளியிட்டுள்ள திடீர் எச்சரிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெருந்திரளாகக் கூடி, சட்டத்தை கையில் எடுத்து போக்குவரத்தையும், பொது அமைதியையும் பாதிக்கும் வகையில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT