admk

சசிகலா தம்பி திவாகரன் மூலம் அரசியலுக்குள் நுழைந்து மா.செ, அமைச்சர் என்ற பதவிகள் பெற்று டெல்டா மாவட்டத்தில் சசி குடும்பத்திற்கே சவாலாக மாறியவர் உணவு அமைச்சர் காமராஜ்.

Advertisment

வெளிமாநிலங்களில் சொத்துகளை வாங்கிக் குவித்து வருகிறார் என எதிர்முகாம் குற்றம்சாட்டி வந்த நிலையில், அமைச்சர் காமராஜ் தற்போது தஞ்சை சரபோஜி கல்லூரி எதிரில் தனது சம்பந்தி, மருமகள் நிர்வகிக்கும்படியாக ஒரு ஸ்பெசாலிட்டி மருத்துவமனை கட்டி வருகிறார் என்பதுதான் லேட்டஸ்ட் டாக்.

Advertisment

இது குறித்து மன்னார்குடியில் அமைச்சரைப் பற்றிய விபரம் அறிந்தவர்கள் கூறும் போது.. திவாகரன் தயவில் கட்சிப் பதவி, எம்.பி, எம்.எல்.ஏ, அமைச்சர் என்று அடுத்தடுத்து பதவிகளை வாங்கிக் கொண்டு சொத்துக்களையும் சேர்த்துக் கொண்டவர், பிறகு மன்னார்குடி குடும்பத்தையே எதிர்ப்பது போல காட்டிக் கொண்டாலும் ரகசிய உறவு வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் அவரது மகன்கள் இனியன், இன்பன் இருவரையும் மருத்துவர் ஆக்கிவிட்டார். இனியன் மன்னார்குடி மருத்துவமனையில் வேலை செய்தார். இனியனுக்கு தஞ்சை வண்டிக்காரத் தெரு டாக்டர் மோகன் மகளை திருமணம் செய்து வைத்தார். அவரது மகனும் மருமகளும் மன்னார்குடி அரசு மருத்துவமனையிலேயே வேலை செய்தார்கள்.

கரோனா பரவல் என்றதும் டாக்டர்கள் இருவரும் விடுப்பு எடுத்துக் கொண்டு சென்னைக்குச் சென்று விட்டனர். இதனால் பிரச்சனை எழுந்த நிலையில் எங்களுக்கு அரசு வேலை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்திருப்பதாகத் தகவல் உள்ளது.

Advertisment

இதில் இனியனை மாவட்ட அரசியலுக்குள் கொண்டு வரும் செயலிலும் அமைச்சர் இறங்கி உள்ளார். அதாவது தனது அக்கா மகன் குமார் மகன் திருமண அழைப்பிதழை எடப்பாடிக்கு கொடுக்க இனியனை தான் அமைச்சர் அனுப்பி அறிமுகப்படுத்தி இருக்கிறார். அதே போல ஓ.பி.எஸ்.சிடம் தனது இருமகன்களையும் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

அடுத்தகட்டமாக இனியனை மாவட்ட அரசியலுக்கும், இளைய மகன் இன்பனை நன்னிலம் தொகுதி அரசியலுக்கும் தயார் செய்து தற்போதைய நிவாரணங்களைக் கூட அவர்கள் மூலமாகவே கொடுத்து வருகிறார். அ.தி.மு.க ஐ.டி விங்க் மாவட்ட அளவிலான கூட்டம் கூட இனியன் தான் நடத்தி இருக்கிறார்.

http://onelink.to/nknapp

மகனை அரசியலுக்கு கொண்டு வந்தாலும் மருமகள் மற்றும் சம்பந்தி நிர்வாகத்தில் நடத்துவதற்காக தஞ்சையில் சரபோஜி கல்லூரி எதிரில் பெரிய அளவில் சுமார் ரூ. 300 கோடி அளவில் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையும் கட்டி வருகிறார். வெளிமாநில கட்டுமானத் தொழிலாளர்கள் தற்போது சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டதால் கட்டுமானப்பணிகள் தொடக்கத்திலேயே உள்ளது.

இதைப் பார்த்த வைத்திலிங்கம் எம்.பி.யும் ஒரு மருத்துவமனை கட்டலாமா என்று பலரிடமும் ஆலோசனை கேட்டு வருகிறார் என்கிறார்கள். அமைச்சரின் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பற்றி தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஸ்பெஷல் ரிப்போர்ட் எடுத்து வருகின்றன.