Skip to main content

திறப்பு விழாவில் திமுக எம்.எல்.ஏ.வுடன் அமைச்சர் வீரமணி வாக்குவாதம்... பெண் இன்ஸ்பெக்டரை பிடித்துத் தள்ளிய அதிமுகவினர்!

Published on 19/12/2020 | Edited on 21/12/2020

 

 Minister Veeramani arguing with DMK MLA at the opening ceremony of the mini clinic ...

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டது மதனாஞ்சேரி கிராமம். இங்கு, டிசம்பர் 19-ஆம் தேதி அரசு மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. இதற்காக அமைக்கப்பட்டிருந்த அரசு விழா மேடையில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் அவரது ஆதரவாளர்களுடன் சென்று கலந்துகொள்ள மேடையேறினார். விழா மேடையில் இருந்த அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அமைச்சர் நிலோஃபர் கபில் ஆகியோரிடம், என் தொகுதியில் நடைபெறும் விழாவில், மேடையில் உள்ள பதாகையில் அமைச்சர்கள் பெயர், கலெக்டர் பெயர் உள்ளது. எதற்காக தொகுதி சட்டமன்ற உறுப்பினராகிய என்னுடைய பெயரை போடாமல் புறக்கணித்துள்ளீர்கள் எனக் கேள்வி எழுப்பினார்.

 

இதற்குப் பதிலளித்த அமைச்சர் கே.சி.வீரமணி, இது அரசு விழா அல்ல, மினி கிளினிக் குறித்து அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் மேடை எனக்கூறி சட்டமன்ற உறுப்பினரையும் அவருடன் வந்த நிர்வாகிகளையும் கீழே இறங்குங்கள், இது அரசு விழா மேடை அல்ல, அதிமுக அரசியல் மேடை என அமைச்சர் கே சி வீரமணி கூறினார்.

 

 Minister Veeramani arguing with DMK MLA at the opening ceremony of the mini clinic ...

 

இதைக்கேட்டு அதிர்ந்து போன சட்டமன்ற உறுப்பினர் அங்கிருந்த செய்தியாளர்களைப் பார்த்து, கேட்டுக்கொள்ளுங்கள். இது அரசு விழா இல்லை என்றும் அரசியல் மேடை என்றும் அமைச்சர் கூறுகிறார். அதிமுக விழா மேடையில், எதற்காக அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் மேடையில் இருக்கிறார்கள் எனக் கேள்வி எழுப்பி, விழாவைப் புறக்கணிப்பதாகக் கூறி தனது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் கூடி இருக்க, அரசு விழா மேடையில் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அரசு நிகழ்ச்சியில் அதிகாரிகளுடன் வந்து கலந்துகொண்டவர், சட்டமன்ற உறுப்பினரிடம் இது அதிமுக நிகழ்ச்சி மேடையில் இறங்குங்கள் என ஒருமையில் மிரட்டியது பலருக்கும் அதிர்ச்சியளித்தது.

 

மேடையில் அமைச்சருக்கும் - எம்.எல்.ஏவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது, அமைச்சருடன் வந்த அதிமுகவினர் பாதுகாப்புக்கு நின்றிருந்த வாணியம்பாடி பெண் காவல் ஆய்வாளர் மங்கையர்கரசியை கீழே தள்ளிவிட்டு மேடையில் ஏறினர். இன்ஸ்பெக்டரிடம் மன்னிப்புக் கூட கேட்கவில்லை அதிமுகவினர்.

 

 Minister Veeramani arguing with DMK MLA at the opening ceremony of the mini clinic ...

 

இதேபோல் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மிட்டாளம் ஊராட்சிப் பகுதியில் அம்மா கிளினிக் திறப்பதற்காக அமைச்சர் வருவதாக அறிவிக்கப்பட்டு, விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மிட்டாளம் கிராமம் ஆம்பூர் சட்டமன்ற தி.மு.க உறுப்பினர் வில்வநாதனின் சொந்த ஊராகும். அங்குதான் அவரது வீடும் உள்ளது. எம்.எல்.ஏ ஊரில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் அவரை முறைப்படி அழைக்கவில்லையாம்.

 

சொந்த ஊரில் நடைபெறும் விழாவில் நானும் கலந்துகொள்ளப் போகிறேன், மேடையேறுவேன் எனச் சொன்னவுடன் பரபரப்பாகி திமுக மற்றும் அதிமுகவினர் மாறி மாறி குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதோடு, திமுகவினரும் அதிமுகவினரும் கட்சிக் கொடிகளை அரசு விழாவில் கட்டினர். இதனால் உடனடியாக ஆம்பூர் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தன் தலைமையில் 3 டி.எஸ்.பி, 2 காவல் ஆய்வாளர்கள், 4 உதவி ஆய்வாளர்கள் என 100 காவலர்கள் குவிக்கப்பட்டனர். அங்கு வந்த அமைச்சர் மினி கிளினிக்கை திறந்து வைத்துச் சென்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்