திருச்சியில் கலைஞர் சிலையை காணொளி காட்சி மூலம் அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார். அதன்பின் பேசிய அவர், “சேலம் மாநாட்டை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைவருக்கும் எனது நன்றி. மாநாட்டை வெற்றி மாநாடாக செய்து காட்டிய கே.என். நேருவிற்கு நன்றி. கே.என். நேருவின் உழைப்பை பார்த்து நான் வியந்து போகிறேன். திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் இதுவரை 76 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. திருச்சி தெற்கு மாவட்டம் முதன்மையாக உள்ளது.
கலைஞரை முதன் முதலில் எம்எல்ஏ ஆக்கியது திருச்சி மாவட்டம் குளித்தலை தொகுதிதான். அதனைத் தொடர்ந்து அவர் போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் கலைஞர் வெற்றி பெற்றார். கலைஞருக்கு பிடித்த ஊராக திருச்சி விளங்கியது. திருச்சி கல்லக்குடி போராட்டம் தமிழக வரலாற்றில் முக்கியமான போராட்டமாக உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த திருச்சி மாவட்டத்தில் கலைஞர் சிலை திறப்பது பெருமைக்குரிய விஷயம். மொழிப்போர் தியாகி சின்னச்சாமி ரயில் நிலையத்தில் தீக்குளித்து தமிழுக்காக தனது உயிரை அர்ப்பணித்தவர். தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுக் கொடுத்தவர் கலைஞர். இந்த வீரவணக்க நாளில் சிலை திறப்பு நம் அனைவருக்கும் பெருமை தரக்கூடிய விஷயம்.