ADVERTISEMENT

முகாந்திரம் இருந்தால் மட்டுமே வழக்கு பதிவு செய்ய முடியும்! -அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் வாதம்!

10:28 PM Dec 18, 2019 | santhoshb@nakk…

டெண்டரில் முறைகேடு நடந்ததாக அதில் பங்கேற்ற நிறுவனங்கள் ஏதும் நீதிமன்றத்தை நாடாத நிலையில், அதற்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத நபர்களால் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சென்னை மற்றும் கோவை மாநகாரட்சிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு கோரப்பட்ட டெண்டரில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அமைச்சர் வேலுமணி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, நெருங்கியவர்களுக்கு ஒப்பந்தத்தை வழங்கியதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும், இதுகுறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கம், திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ADVERTISEMENT


வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இது தொடர்பான விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி பொன்னி மேற்கொள்ள வேண்டும் எனவும், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் இந்த விசாரணையைக் கண்காணித்து 2 வாரங்களில் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டு, இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் வேலுமணி பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் வேலுமணி தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது, அதில், தன் மீதான புகழுக்கு களங்கம் விளைவிப்பதற்காக எதிர்க்கட்சிகளின் தூண்டுதலின் பேரில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், வேண்டியவர்களுக்கு டெண்டர் வழங்கியதாக மனுதாரர் குறிப்பிடும் நிறுவனங்களுக்கும் தனக்கும் எந்த தொடர்புமில்லை எனவும், தமிழக அரசின் சட்ட விதிகளைப் பின்பற்றியே டெண்டர் ஒதுக்கீடு நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், டெண்டர்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு டெண்டரும் மின்னணு முறையில் ஆன்லைன் வாயிலாக நடத்தப்படுவதாகவும், மாநகராட்சி சார்பில், டெண்டர் குறித்து தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் முறைப்படி விளம்பரப்படுத்தப்படுவதோடு, அரசு இணையதளத்திலும் டெண்டர் தொடர்பாக அறிவிப்பாணை வெளியிடப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று (18- ஆம் தேதி) மீண்டும் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது, தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், அரசுப் பணியாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மீது உள்நோக்கத்தோடும், பொய்யாகவும் புகார்கள் கொடுப்பதற்கான வாய்ப்புள்ளதால், முதற்கட்ட விசாரணை முடிந்து, அதில் முகாந்திரம் இருந்தால் மட்டுமே வழக்கு பதிவு செய்ய முடியும் என வாதிட்டனர். அதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை ஜனவரி மாதம் 7-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT