ADVERTISEMENT

'மலை மக்கள் வீடுதேடி வரும் மருத்துவம்..'- அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி!

09:31 PM Aug 05, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தொட்டகாஜனூர் துணை சுகாதார நிலையத்தில் 5 ந் தேதி ‘மக்களை தேடி மருத்துவம்' என்ற திட்டத்தினை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் மக்களை தேடி மருத்துவம் என்கிற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அவர் தொடங்கி வைக்க, தொடர்ந்து ஒவ்வொரு மாவட்ட அமைச்சர்களும் அவரவர் மாவட்டத்தில் இத்திட்ட தொடக்க விழாக்களை நடத்தினார்கள்.

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர்.எஸ்.செல்வராஜ் மற்றும் அந்தியூர்; சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலையில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி இத் திட்டத்தினை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

"தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் தொடர்ந்து பல்வேறு மக்கள் நேரடியாக பயன் பெறும் திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்தி வருகிறார்கள். தேர்தலுக்கு முன்பே திட்டமிட்டு என்னென்ன பணிகள் மக்களுக்காக செய்யப்பட வேண்டியிருக்கிறது, எதிலே குறைபாடு இருக்கிறது, எதில் தாமதம் ஏற்படுகிறது, மக்கள் எதில் சிரமப்படுகிறார்கள் என்பதையெல்லாம் உணர்ந்து, அதற்கென திட்டமிட்டு, பல்வேறு திட்டங்களை தேர்தலுக்கு முன்பே அறிவித்தார்கள். தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னர் அத்திட்டங்களோடு மேலும் பல திட்டங்களை இணைத்து அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சரின் தொலைநோக்கு திட்டங்கள் என்ற தலைப்பில் பல்வேறு திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வரிசையில் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் சுகாதாரத்துறையைச் சேர்ந்த அலுவலர்களும், தாளவாடியில் இருக்கின்ற அரசு ஆரம்ப சுகாதார மையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்துதல் என்ற திட்டத்தை அரசிற்கு அனுப்பியுள்ளார்கள். இங்கு ஏற்கனவே 5 மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்திட்டம் நிறைவேற்றப்படும் பொழுது மேலும் கூடுதல் வசதிகள் மேற்கொள்ளப்படும். இங்கு உள்ள மலைவாழ் மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக கீழ் பகுதிக்கு இறங்கி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதனைத் தவிர்த்து, இங்கேயே ஆரம்ப சுகாதார மையத்தை முழுமையான பயன்பாட்டிற்கு மருத்துவமனையாக கொண்டுவரும் பட்சத்தில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு சிரமங்கள் தவிர்க்கப்படும். எனவே இத்திட்டத்தை நிறைவேற்றி வழங்க ஏதுவாக தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, விரைவில் இவை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

அதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி வட்டாரத்தைச் சார்ந்த தொட்டகாஜனூர் துணை சுகாதார நிலையத்தில் ‘மக்களை தேடி மருத்துவம்" திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் முதற்கட்டமாக தாளவாடி வட்டாரத்திலும் அதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தாளவாடி வட்டாரத்தில் முதற்கட்டமாக 1,409 பயனாளிகள் பயன்பெறவுள்ளனர்.

மேலும், படுத்தபடுக்கையில் உள்ள நோயாளிகளுக்கு இயன்முறை மருத்துவம், நோய்த் தடுப்பு பராமரிப்பு பணியாளர்கள் மற்றும் உடற்பயிற்சி சிகிச்சையாளர் மூலம் சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளன. தொடர்ந்து உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாறுதல் ஆணைகளையும், 4 பயனாளிகளுக்கு தலா ரூ.12,000 மதிப்பில் முதியோர் மற்றும் விதவை உதவித்தொகைகளையும் மற்றும் 60 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

இந்த நிகழ்ச்சியில், சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் சவுண்டம்மாள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT