Skip to main content

மாணவர்களுக்குக் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தைத் தொடங்கி வைத்த அமைச்சர்

Published on 28/03/2023 | Edited on 28/03/2023

 

minister muthusamy launched second phase students breakfast scheme in erode

 

ஈரோட்டில் பள்ளி குழந்தைகளுக்கு இரண்டாம் கட்டமாக சிற்றண்டி வழங்கும் திட்டத்தை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஈரோடு ஆசிரியர் காலனியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று துவக்கி வைத்தார்.

 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். தற்போது இரண்டாம் கட்டமாக விடுபட்ட பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் முதல் கட்டம் இரண்டாம் கட்டம் என சேர்த்து 96 பள்ளிகளை சேர்ந்த 9 ஆயிரத்து 180 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இன்னும் மாவட்டத்தில் விடுபட்ட பள்ளிகள் மூன்றாவது கட்டத்தில் சேர்க்கப்படும் இந்த காலை சிற்றுண்டி வழங்குவதால் பள்ளிகளுக்கு வரும் மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.

 

மேலும் கல்வி வளர்ச்சிக்காக அரசு பள்ளியில் படித்த மாணவிகள் கல்லூரியில் சேரும் போது மாதம் ரூபாய் 1000 வழங்கப்படுகிறது. செப்டம்பர் 15 முதல் ஒரு கோடி பெண்களுக்கு ஆயிரம் உரிமைத் தொகையாக வழங்கப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சுமார் 15 அரசு பள்ளிகளை தனியார் தத்தெடுத்து மேம்படுத்த முன்வந்துள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு வடமுகம் வெள்ளோடு பகுதியில் நிலம் வழங்க இடம் பார்க்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தின் பிரிவை மாற்றம் செய்ய கலெக்டர் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அங்கிருந்து உத்தரவு வந்ததும் சுமார் 78 மாற்றுத்திறனாளிகளுக்கு அவ்விடத்தில் பட்டா வழங்கப்படும்" இவ்வாறு அவர் கூறினார். கலெக்டர் கிருஷ்ணன் உன்னி உட்பட பல உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.