அதனைத் தொடர்ந்து, ராதாமதகு வாய்க்கால் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எ.வ வேலு, "கடலூர் மாவட்டத்திற்கு சாலை விரிவாக்கப் பணிக்காக ரூபாய் 195 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்குத் தமிழக வேளாண்துறை அமைச்சர் முயற்சி தான். பெண்ணாடம்- திட்டக்குடிக்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
வீராணம் ஏரிகரை சாலை தற்போது 7 மீட்டர் சாலையாக உள்ளது. இதனை அகலப்படுத்த வேண்டும் என்று வேளாண்துறை அமைச்சர் மற்றும் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பிளர் சிந்தனைச்செல்வன் ஆகியோர் வலியுறுத்தி வருகிறார்கள். இதனை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வீராணம் ஏரியின் கீழகரைப் பகுதியான கந்தகுமரனிலிருந்து மேலகரை பகுதி சோழதரம் வரை ஏரியின் உள்ளே பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அதிக தொகை வேண்டும் என்பதால், ஒன்றிய அமைச்சரைச் சந்தித்து, இதற்கான ஒன்றிய நிதியை பெற்று பாலம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது, காட்டுமன்னார்கோவில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.