ADVERTISEMENT

“பல ஆயிரம் கோடி ரூபாய் பெரும் செல்வத்தை ஏழை, எளியவர்களுக்கு உயில் எழுதி வைத்துவிட்டு மறைந்தவர் எம்.ஜி.ஆர்” - ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். புகழாரம்

01:00 PM Jan 15, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிமுகவின் நிறுவனரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 105வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், அவரது பிறந்தநாளுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்களான ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் அவர்கள், “உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும், எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான அதிமுக உடன்பிறப்புகளுக்கும், எம்.ஜி.ஆரின் 105-ஆவது பிறந்த நாள் புகழோவிய மடல் வழியாக நல்வாழ்த்துக்களைக் கூறி மகிழ்கிறோம். பலர் வருவார், போவார் பூமியிலே வாழ்க்கை என்றொரு பயணத்திலே வானத்து நிலவாய் சிலர் இருப்பார் - அந்த வரிசையில் – முதல்வர் நம் உள்ளமெல்லாம் நிறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

ஒரு தனி மனிதராக, பணியாற்றிய கலைத் துறையின் நாயகராக, ஓர் இயக்கத்தின் தலைவராக, மக்களின் பேராதரவைப் பெற்ற முதல்வராக, “செல்லும் இடமெல்லாம் சீர்பெருக்கி, பேர் நிறுத்தி, கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும் பிள்ளையென நாளும் பேசவந்த கண்மணியே வள்ளலே! எங்கள் வாழ்வே!" என்று ஆயிரம் தலைமுறை தமிழர்கள் கொண்டாடி மகிழத்தக்க மன்னாதி மன்னன், ஒளி விளக்கு, எங்கள் வீட்டுப் பிள்ளை அல்லவா நம் அன்புத் தலைவர் எம்.ஜி.ஆர்.

ஏழை குடும்பத்தில் பிறந்து, அகதியாக தமிழ் நாட்டுக்கு வந்து, அன்பு கொண்ட மகனாக குடும்பத்திற்காக உழைத்து, "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன்” என்ற உணர்வுடன் பாலிலும் வெண்மை, பனியிலும் வெண்மை என்று கூறத்தக்க அளவிற்கு வெள்ளை உள்ளம் கொண்டு வாழ்ந்த, உயர்ந்த உள்ளத்திற்கு சொந்தக்காரர் நம் எம்.ஜி.ஆர்.

தனக்கென அவர் ஒருபோதும் வாழ்ந்ததில்லை. தன் திறமையாலும், உழைப்பாலும் பாடுபட்டு ஈட்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பெரும் செல்வத்தை ஏழைகளுக்கும், எளியவர்களுக்கும், உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கும், உயில் எழுதி வைத்துவிட்டு மறைந்த எம்.ஜி.ஆருக்கு நிகரான கொடை வள்ளல் யாரும் உண்டோ? எம்.ஜி.ஆர். மழை போலும், மலர் போலும் பிறர்க்கென வாழ்ந்தவர்.

"தன்னை தலையாகச் செய்வானும் தான்" என்ற புறநானூற்று வரிகளுக்கு இலக்கணமாய், இலக்கியமாய் கலைத் துறையில் தன் அயராத உழைப்பாலும், அசைவிலா ஊக்கத்தாலும், உழைப்பே உயர்வு தரும் என்ற கொள்கையாலும் நேற்றும், இன்றும், நாளையும் யாராலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத உயரத்திற்குச் சென்று சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் நம் எம்.ஜி.ஆர். பேரறிஞர் அண்ணாவும், தமிழ் இன எழுச்சியில் அக்கறை கொண்ட சான்றோரும் உருவாக்கிய இயக்கத்தை அழிக்க, ஊழலும், சுயநலமும், தீய சக்திகளும் அண்ணாவின் ஆட்சியை தங்கள் கோரப் பிடிக்குள் வைத்து நடத்திய அராஜகத்தை எதிர்த்து துணிவுடன் போராடியவர் எம்.ஜி.ஆர்.


“தோட்டம் காக்க போட்டவேலி பயிரைத் தின்பதோ ?

அதை கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ ?

நான் ஒரு கை பார்க்கிறேன்; நேரம் வரும் கேட்கிறேன்.

பூனை அல்ல, புலிதான் என்று போகப் போகக் காட்டுகிறேன்."


என்று, எடுத்த சபதம் முடித்து நம் உயிரினும் மேலான அ.இ.அ.தி.மு.க.வைத் தோற்றுவித்து, வளர்த்து, ஆட்சியையும், அதிகாரத்தையும் சாமான்ய மக்களின் கைகளுக்குக் கொண்டுசென்ற ஏழைகளின் தோழன், கொள்கைக் காவலன், எண்ணியது எண்ணியாங்கு முடித்த நாடோடி மன்னன் நம் தலைவர் எம்.ஜி.ஆர். பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தாலும், பலநூறு ஆண்டுகள் நிலைத்து நிற்கும் எடுத்துக்காட்டான திட்டங்களை நிறைவேற்றி, "மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்தமண்ணிலே” என்று கருணை தீபமாய் ஒளிரும் ஆட்சி முறையை தமிழ் நாட்டுக்கு வழங்கியவர் நம் எம்.ஜி.ஆர்.

உலகம் போற்றும் சத்துணவுத் திட்டம்; தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்; திராவிட இயக்கம் காணத் துடித்த சாதிப் பெயர்கள் நீக்கம்; கிராமப் புறங்களில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்கூட நிலவி வந்த அடக்குமுறை பிரபுத்துவ நிர்வாக அமைப்பை ஒழித்தது; பெண்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தனி ஒதுக்கீடு என்று எல்லா வகையிலும் போற்றத்தக்கவையும், எந்நாளும் நிலைத்திருக்கக் கூடியவையுமான பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியவர் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் தலைமைச் சீடராக, அவரையே தனது மாதா, பிதா, குரு தெய்வமாகக் கொண்டு வாழ்ந்த ஜெயலலிதாவிடம் 30 ஆண்டுகள் பயிற்சி பெற்ற நாம், எம்.ஜி.ஆர். வகுத்துத் தந்த பாதையில், ஜெயலலிதாவின் வீரத்தோடும், விவேகத்தோடும் செயல்பட வேண்டிய காலம் இது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT