தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் நாளை (20/04/2021) முதல் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 04.00 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மெட்ரோ ரயில் சேவையின் நேரத்தை மாற்றி சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று (19/04/2021) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், "சென்னையில் காலை 05.30 மணி முதல் இரவு 09.00 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயங்கும். கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள நேரங்களில் 5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 11.00 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்ட நிலையில் இரவு ஊரடங்கு காரணமாக 09.00 மணிக்கே ரயில் சேவை நிறுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.