திமுகவைச் சேர்ந்த ராமச்சந்திரன் சேலம் மாநகராட்சியின் மேயராக உள்ளார். இவருடைய மகன் சுதர்சன்பாபு. 15 வருடங்களுக்கு முன்பு சுதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சுதர்சன் பாபுவிற்கும் சுதாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சேலம் கோரிமேட்டில் இருந்த சுதாவிற்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டதாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டார். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சுதா உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த தகவல் சுதாவின் உறவினர்களுக்கு தெரியவர, அங்கு அவர்கள் ஒன்று கூடினார்கள். தன்னுடைய சகோதரிக்கு சாப்பாடு போடாததால் இறந்து விட்டார் என்கிற குற்றச்சாட்டுகளை அடுக்கினர். செய்தியாளர்களைச் சந்தித்த சுதாவின் சகோதரர், ''அவரை அடித்துக் கொடுமைப்படுத்தி சாப்பாட்டை போடாமல் கொன்று விட்டார்கள். ஒரு சின்ன பஞ்சாயத்து வச்சு உன்னுடைய அக்காவை கூட்டிக்கொண்டு போய்விடு என என்னிடம் சொல்லி இருந்தால் என்னுடைய அக்காவை காப்பாற்றி இருப்பேன். ஒரு நாய்க்கு போடுகின்ற சோறைக் கூட என் அக்காவிற்கு போடவில்லை' என ஆதங்கமாகத் தெரிவித்தார்.
அதேபோல் அவருடைய மறைவிற்கு மேயர் வரவில்லை, மேயரின் மனைவி வரவில்லை. சுதர்சன் பாபு வரவில்லை. குழந்தையையும் ஏற்காட்டில் ஹாஸ்டலில் சேர்த்து விட்டார்கள். அந்த குழந்தைக்கு ஆசை இருக்காதா அம்மாவை பார்க்க வேண்டும்' எனத் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.