ADVERTISEMENT

காதல் மனைவியை குடும்பமே சேர்ந்து செய்த ஆணவக் கொலை; கணவர் உள்ளிட்ட 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

08:01 PM Feb 19, 2024 | kalaimohan

கடலூர் மாவட்டம் மேல் புவனகிரியைச் சேர்ந்தவர் பஞ்சநாதன். இவர் கடந்த 2014 ஜூலை 8 ஆம் தேதி புவனகிரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்திருந்தார். அதில், ‘பெருமாத்தூர் மெயின் ரோட்டில் ஜெராக்ஸ் கடை வைத்து வாட்டர் கேன் வியாபாரம் செய்து வந்த தனது மகள் சீதாவை (28) காணவில்லை’ என்று கூறியிருந்தார். புகாரின் பேரில் அப்போதைய காவல் ஆய்வாளர் ரமேஷ் ராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சீதாவுக்கும் சிதம்பரத்தைச் சேர்ந்த அரச கிருஷ்ணன் மகன் சரவணன் (36) என்பவருக்கும் பதிவுத் திருமணம் நடந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சரவணனை தேடி வந்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் கடந்த 15.7.2014 அன்று சரவணன், பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். மேலும் கடந்த 16.7.2014 அன்று சரவணனின் அக்கா சகுந்தலாவின் கணவர் வெங்கடேசன் என்பவர், மேல்புவனகிரி கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவனிடம் ஆஜராகினார். அவர் கொடுத்த வாக்குமூலத்தில், ''காணாமல் போன சீதாவை 16.6.2014 ஆம் தேதி என் மைத்துனர் சரவணன் இருசக்கர வாகனத்தில், தான் வாட்ச்மேனாக வேலை செய்யும் சிதம்பரம் அம்மாபேட்டை பைபாஸ் ரோட்டில் உள்ள அட்சயா கார்டனுக்கு அழைத்து வந்ததாகவும், பின்னர் சீதாவை தனிக்குடித்தனம் வைப்பதாகக் கூறி தன் வீட்டிலேயே தங்க வைத்தார்.

ADVERTISEMENT

பின்னர் தானும் தன் மைத்துனர் சரவணன், மாமியார் செல்வி, மனைவி சகுந்தலா ஆகியோர், 'சீதா பட்டியலின பெண். நாம் பிற்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் எனவே அவரை உயிருடன் விடக்கூடாது எனக் கொலை செய்து பிணத்தை எரித்து விட வேண்டும் என முடிவெடுத்து, கடந்த 17.6.2014 ஆம் தேதி சீதா வீட்டில் படுத்திருந்தபோது, என் மனைவியையும் என் மாமியாரையும் வீட்டின் வெளியே நிறுத்திவிட்டு நானும் சரவணனும் வீட்டிற்குள் போய் சரவணன் சீதாவின் கழுத்தை பிடித்து நெறித்தார். நான் கட்டையால் சீதாவின் தலையில் அடித்தேன். இதில் சீதா இறந்துவிட்டார்.

அதன் பின்னர் டீசலும், சர்க்கரையும் வாங்கி வந்து கார்டனுக்கு உள்ளேயே உள்ள பள்ளத்திற்கு அருகில் எடுத்துச் சென்று சீதாவின் பிணத்தை எரித்தோம். பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன் நீங்கள் தப்பித்துக் கொள்ளுங்கள் என்று சரவணன் சொன்னதால், நானும் என் மனைவி, என் மாமியார் 3 பேரும் அங்கிருந்து வந்துவிட்டோம்'' என வாக்குமூலம் அளித்ததாகக் கூறியுள்ளார். அதன் பேரில் வெங்கடேசன், சகுந்தலா, செல்வி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று பாதி எரிந்த நிலையில் சீதாவின் உடல் எலும்புகளை விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி தடயவியல் வல்லுநர்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

இவர்கள் மீது கடலூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்து திங்கள் கிழமை (19/02/2024) இந்த வழக்கில் நீதிபதி உத்தமராஜ் தீர்ப்பில், ‘சரவணன், வெங்கடேசன், செல்வி, சகுந்தலா ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நான்கு பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார். மேலும் சரவணன், வெங்கடேசன் ஆகியோருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதமும், செல்வி, சகுந்தலா ஆகியோருக்கு தலா ரூ. 20,000 அபராதமும் விதித்தார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் வனராசு ஆஜராகி வாதாடினார்.

இந்த வழக்கில் நேரில் கண்ட சாட்சிகள் இல்லாத நிலையில், தொடர்ச்சியான சம்பவங்களையும் தக்க சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில், புலன் விசாரணை மேற்கொண்டு குற்றத்தை நிரூபித்து குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. இவ்வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக இருந்தவர், அப்போதைய சிதம்பரம் டிஎஸ்பியாக, தற்போது கடலூர் மாவட்ட எஸ்பியாக இருக்கும் ராஜாராம் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT