Skip to main content

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு; விபரீத முடிவெடுத்த மாணவர்கள்

Published on 20/05/2023 | Edited on 20/05/2023

 

sslc exam result related incident kallakurichi and cuddalore 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் தெங்கியாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகேசன், சத்யா தம்பதி. இவர்களது மகன் வெற்றிவேல் (வயது 15). இவர் அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து தேர்வு எழுதியிருந்தார். நேற்று தேர்வு முடிவுகள் வெளிவந்தன. அதில் வெற்றிவேல் மொத்தம் 206 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். தமிழ் பாடத்தில் 23 மதிப்பெண்கள் பெற்றது அவர் தோல்விக்கு காரணமாக இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த வெற்றிவேல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

இது குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் கச்சராபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வெற்றிவேல் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவனின் தாய், தந்தை இருவரும் கேரளாவில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். வெற்றிவேல் தனது பாட்டியுடன் தெங்கியாநத்தம் வீட்டில் இருந்தபடி படித்து வந்துள்ளார். தன்னம்பிக்கை குறைவே அவர் தற்கொலை செய்யக் காரணமாக இருந்துள்ளது என்கிறார்கள் அவரது நண்பர்கள்.

 

அதே போல் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகில் உள்ள செம்பேரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நடராஜன், சுகுணா தம்பதி. இவர்களது மகன் செழியன் (வயது 16). நடராஜன் வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்து அதன் மூலம் மனைவி மற்றும் பிள்ளைகளை காப்பாற்றி வருகிறார். இந்த நிலையில் செழியன் பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எஸ்எஸ்எல்சி படித்து வந்துள்ளார். சமீபத்தில் நடந்த பொதுத்தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதியுள்ளார். நேற்று தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் மொத்தம் 226 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். தேர்வு முடிவுகள் எப்படி இருக்குமோ என்ற அச்சத்தில் முடிவு வெளிவருவதற்கு முதல் நாளே வீட்டில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தேர்வு முடிவுகள் தோல்வியில் அமையும் என்ற பயத்தில் தற்கொலைக்கு செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.