தமிழகத்தின் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்கடன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு முப்படைகளின் தளபதி பிபின் ராவத் ராணுவ ஹெலிகாப்டரில் நேற்று முன்தினம் (08.12.2021) சென்றார். அப்போது துரதிருஷ்டவசமாக அவர் சென்ற ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது. இதில் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்தனர்.
நாட்டையே உலுக்கிய இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதே போல் பலரும் தளபதி பிபின் ராவத் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் முப்படைத் தளபதி பிபின் ராவத் திருவுருவப் படத்திற்கு உயர்நீதிமன்றத்தின் ஆவின் கேட் முன்பு வழக்கறிஞர்கள் மற்றும் அங்கு பணிபுரிந்த காவலர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.