ADVERTISEMENT

சேலத்தில் ஹோட்டல் அதிபரை கடத்தி கொலை செய்து சடலம் வாய்க்காலில் வீச்சு!

07:21 AM Aug 22, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலத்தில் மாயமான ஹோட்டல் அதிபரை மர்ம நபர்கள் கொலை செய்து, சடலத்தை முசிறி அருகே ஆற்று வாய்க்காலில் சடலத்தை வீசி எறிந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், ஹோட்டல் அதிபரின் நண்பரையும் காணாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் அம்மாபேட்டை அன்புக்கரசு மெத்தை பகுதியைச் சேர்ந்தவர் கோபி (49). நாராயணநகர் செல்லும் சாலையில் அம்மன் மெஸ் என்ற பெயரில் அசைவ உணவகம் நடத்தி வந்தார். கடந்த 14ம் தேதி இரவு வழக்கம்போல் உணவகத்தில் வேலைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பினார்.


கோபி மட்டும் தனியாக வீட்டின் மேல் மாடியில் படுத்துக் தூங்கிக் கொண்டிருந்தார். இரவு 11 மணியளவில் வீட்டின் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு, மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து கதவைத் திறந்தார். பிறகு நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்குள் வராததால் சந்தேகம் அடைந்த அவருடைய மனைவி வாசலுக்கு வந்து பார்த்தார். வாசல் படியில் கணவரின் செல்போன், செருப்பு மட்டும் கிடந்தன.

பல இடங்களில் தேடிப்பார்த்தும் கோபி சென்ற இடம் தெரியவில்லை. இதுகுறித்து கோபியின் உறவினர்கள் கடந்த 16ம் தேதி அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தனர். கணவரை சிலர் கடத்திச் சென்றிருக்கலாம் என்றும் புகாரில் கூறியிருந்தனர்.புகார் அளித்து ஒரு வாரம் ஆன நிலையில் கோபியைப் பற்றிய எந்த தகவலும் போலீசாருக்கு தெரியவில்லை. இந்நிலையில், திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஆற்று வாய்க்காலில் ஆண் சடலம் ஒன்று இன்று மிதந்து வந்தது. சடலத்தைக் கைப்பற்றிய அங்குள்ள போலீசார், இதுகுறித்து அனைத்து மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.


தகவல் அறிந்த கோபியின் உறவினர்கள் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 21, 2018) அன்று, முசிறிக்குச் சென்று சடலத்தைப் பார்த்தனர். அது, கோபிதான் என்பதை உறுதிப்படுத்தினர். அவரை மர்ம நபர்கள் கடத்திச்சென்று கொலை செய்து, பின்னர் சடலத்தை ஆற்று வாய்க்காலில் வீசி இருப்பது தெரியவந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, கோபி காணாமல் போன அன்று அவருடைய நெருங்கிய நண்பர் மணிகண்டன் என்பவரும் திடீரென்று மாயமாகியுள்ளார். இதனால் அம்மாபேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோபி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், மணிகண்டனின் நிலை என்னவானது? கோபியை கொன்றவர்கள் யார்? எதற்காக இந்த கொலை நடந்தது? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT