ADVERTISEMENT

சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் வேல்முருகனின் உடல் போலீஸ் பாதுகாப்புடன் பெரியகுளத்தில் தகனம்!

05:50 PM Nov 05, 2020 | tarivazhagan

ADVERTISEMENT


தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில், கடந்த 2007 ஆம் ஆண்டு முருகமலை வனப்பகுதியில் நக்சல் அமைப்பைச் சேர்ந்த 11 நபர்கள் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்ட பொழுது, அப்பகுதி மக்களின் உதவியுடன் போலீசார் பிடித்தனர். தப்பி ஓடிய எட்டு பேரை போலீசார் தேடி வந்தனர்.

ADVERTISEMENT


இந்நிலையில்தான், கொடைக்கானல் அருகே உள்ள வடகவுஞ்சி வனப்பகுதியில் அவர்கள் இருப்பதாக தகவலறிந்து, போலீசார் பிடிக்க முற்பட்டனர். அப்போது, நவீன் பிரசாத் போலீசாரால் சுடப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், மேலும் மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.


கடந்த 2010 ஆம் ஆண்டு முத்துச்செல்வம், ஈஸ்வரன், பாலகிருஷ்ணன், வேல்முருகன், கார்திக், பழனிவேல் ஆகியோருக்கு பெரியகுளம் குற்றவியல் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இந்நிலையில், ஜாமீனில் சென்ற வேல்முருகன், கார்த்திக் மற்றும் பழனிவேல் தலைமறைவான நிலையில் பழனிவேல் என்பவர் மட்டும் கடந்த 2016 ஆம் அண்டு பிடிபட்டார்.


இதனைத் தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு தலைமறைவாக இருந்த கார்த்திக் என்பவர், கேரள வனப்பகுதியில், கேரள தண்டர்போல்ட் காவலர்களால் சுட்டுக்கொள்ளப்பட்டார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட மீன்முட்டி வனப்பகுதியில் நக்சல் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக, கேரள மாநில தண்டர் போல்ட் காவலர்களுக்கு தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது காவலர்களை நோக்கி நக்சல் அமைப்பினர் துப்பாக்கியால் சுடத் துவங்கிய நிலையில், கேரள தண்டர்போல் காவலர்களும் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். பெரியகுளம் முருகமலை ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டு பிடிபட்ட வேல்முருகன் துப்பாக்கிச் சூட்டில் பலியானர்.


மேலும், உடன் இருந்த 5 நபர்கள் தப்பி ஓடியதாக கேரள தண்டர்போல் காவலர்கள் தெரிவிக்கின்றனர். போலீஸ் சுட்டதில் பலியான வேல்முருகனின் உடல், அவரது தாய் உள்ளிட்ட உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டு கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இதன்பிறகு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, தமிழக காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் வேல்முருகனின் சொந்த ஊரான பெரியகுளத்தில் உறவினர்கள் முன்னிலையில் அதிகாலையில் எரியூட்டப்பட்டது.


அப்போது, வேல் முருகனின் உடலை எரியூட்டுவதற்கு முன்பு தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து வந்த கம்யூனிஸ்ட் மவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர்கள், கேரள அரசுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷமிட்டனர்.

மாவோயிஸ்ட் வேல்முருகனின் உடல் எரியூட்டப்பட்ட இடத்தில், தேனி மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மற்றும் பெரியகுளம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர், 'கியூ' பிரிவு காவல்துறையினர், நக்சல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

மாவோயிஸ்ட் வேல்முருகன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT