ADVERTISEMENT

திண்டுக்கல் நெடுஞ்சாலையில் நடந்த சேஸிங்! - குற்றவாளிகளைத் தட்டித் தூக்கிய போலீஸ்

12:17 PM Oct 31, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் செயின் பறிப்பு வாகனம் திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இதனை விசாரித்த மதுரை மாவட்ட போலீஸுக்கு இந்தச் சம்பவங்களில் ஈடுபடுவது தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ரவி(20), சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ்(26), திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தாலிக்ராஜ்(28) ஆகிய மூன்று நபர்கள்தான் என்பது தெரியவந்தது. ஆனால், அந்த மூவரும் காவல்துறையினரிடம் சிக்காமல் சுற்றித் திரிந்து வந்தனர். இந்நிலையில், மதுரை மாவட்ட போலீஸாருக்கு இந்த மூன்று குற்றவாளிகளும் கரூர் மாவட்டத்தில் இருப்பதாகத் தெரியவந்தது. உடனே மதுரை காவல்துறை சார்பில் கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு, ‘மதுரையில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த வாண்டட் அக்கியூஸ்ட்கள் ஆனந்தராஜ், தாலிக்ராஜ், ரவி மூனு பேரும் உங்க மாவட்டத்துல இருக்காங்க அவங்கள பார்த்ததும் அரஸ்ட் பண்ணுங்க’ என புகைப்படத்தோடு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் கிடைத்ததும் அலர்ட்டான கரூர் நகர போலீஸார் நகரப் பகுதியில் தீவிர வாகனச் சோதனையைத் துவங்கினர். அப்போது கரூர் பசுபதிபாளையம் பகுதியில் மூவரும் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். இதனைப் பார்த்த கரூர் போலீசார், அவர்களை மறித்துள்ளனர். ஆனால், அவர்கள் நிற்காமல் தப்பித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து போலீஸார் அவர்களை விரட்டத் தொடங்கினர். அப்போது அவர்கள் கரூரில் இருந்து திண்டுக்கல் நெடுஞ்சாலை அரவக்குறிச்சி நோக்கி வேகமாகச் சென்றுள்ளனர்.

அதனை நோட்டமிட்ட ரோந்து போலீஸார், அவர்களை விடாமல் சேஸ் செய்தனர். அதேசமயம், போக்குவரத்து போலீசாருக்குத் தகவலை பாஸ் செய்தனர். அந்தத் தகவலை அடுத்து தடாக்கோவில் அருகே 10-க்கும் மேற்பட்ட போலீசார், இருசக்கர வாகனத்தில் சென்ற குற்றவாளிகளை சினிமா பாணியில் துரத்திச் சென்றனர். முன்னே குற்றவாளிகள் மூவரும் பைக்கில் சீறிப் பாய, பின்னே காவல்துறையின் காரும், பைக்கும் வேகமெடுக்க அந்தச் சாலையில் இருந்த மக்கள் ஒரு நிமிடம் என்ன சினிமா எதுவும் ஷூட் பண்றாங்களா என நினைக்கும் அளவுக்கு சேஸிங் இருந்தது. தடாக்கோவில் பகுதியில் குற்றவாளிகளின் பைக்கை முன்பக்கமாகச் சென்று போலீஸார் மறிக்க, போலீஸ் வாகனத்தில் மோதி குற்றவாளிகளின் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்தது. ஆனந்தராஜ், தாலிக்ராஜ், ரவி ஆகிய மூவரையும் போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.

பிடிபட்ட அவர்களிடமிருந்து கத்தி, செல்போன்கள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்து, போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செயின் பறிப்பு, இரு சக்கர வாகனத் திருட்டு எனப் பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று நபர்களை சினிமா பாணியில் அரவக்குறிச்சி காவல் நிலையத்துக்கு உட்பட்ட நெடுஞ்சாலையில் போலீசார் துரத்தி கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT