Skip to main content

ரயில்வே பாதுகாப்பு பணிகளில் தற்காலிக பணியாளர்கள் நியமனம் ஆபத்தானதா?

Published on 16/08/2019 | Edited on 16/08/2019

தெற்கு ரயில்வேயில் பாதுகாப்பு பணிகளில் தற்காலிக பணியாளர்களை நியமிப்பதற்கு வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது ரயில்வே நிர்வாகம். ஆனால் இந்த ரயில்வே பாதுகாப்பு பணிகளில் தற்காலிக பணியாளர்களை நியமிப்பது பெரிய ஆபத்தில் முடியும் என்கிறார் தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன்

இது குறித்து நாம் அவரிடம் பேசுகையில்… 

தெற்கு ரயில்வேயில் 20 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருக்கிறது. இதில் தண்டவாள பராமரிப்பாளர்கள், பாயிண்ட்ஸ் மேன்கள், எலக்ட்ரிகல், மெக்கானிக்கல் துறை களாசிகள் பணியிடங்கள் பாதுகாப்பு துறைகளை சார்ந்தவை. இந்த பிரிவில் காலியிடங்கள் உள்ளதால் நிலமையை சமாளிக்க கடைநிலை ஊழியர்களாக 2393 முன்னாள் ராணுவத்தினரை நியமிக்க தற்போது முடிவு செய்து இருக்கிறது. 

 

railway

 

மேலும் கடைநிலை பணியாளர்கள் தேர்வு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. வரும் 2020 ம் ஆண்டுதான் மீண்டும் கடைநிலை பணியாளர்கள் தேர்வு செய்யும் நடைமுறைகள் துவங்கும். இதனால் நிரந்தர ஊழியர்கள் நியமனத்திற்கு உடனடி வாய்ப்பு இல்லை. 

இதற்கு முன்பு தினக்கூலி அடிப்படையில் முன்னாள் ராணுவத்தினரை நியமிக்க பலமுறை ரயில்வே கோட்டங்கள் விளம்பரம் செய்தன. தினக்கூலிகளாக சேர அவர்கள் ஆர்வம் காட்டவில்லை.

இதனால் கூடுதல் சலுகைகளை அறிவித்து தெற்கு ரயில்வே மூத்த பர்சனல் அதிகாரி இந்துமதி கடந்த ஆகஸ்ட் 13 ம் தேதி விளம்பரம் வெளியிட்டு இருக்கிறார். மாதாந்திர தொகுப்பு ஊதியமாக பெரு நகரங்களில் ரூ. 22072 , நடுத்தர நகரங்களில் ரூ. 24660 , சிறிய ஊர்களில் ரூ.22968 வழங்கப்படும் ரூ. 5000 சீருடைப்படி தரப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

பணிக்கு சென்று வர பயண பாஸ் வழங்கப்படும். பணி நியமத்தமாக வெளியூர்கள் சென்றால் ரூ.500 பேட்டா தரப்படும், வாராந்திர விடுப்பு வழங்கப்படும் என்றும், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கிறது. முப்படைகளில் ஏதாவது ஒன்றில் குறைந்த்து 15 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். விளம்பரம் வெளியான தேதியில் ஐம்பது வயதிற்கு குறைவாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. 

நிர்வாகம் வேலையை விட்டு நீக்கினாலோ, இவர்கள் வேலையை விட்டு நின்றாலோ 15 நாட்கள் நோட்டிஸ் அவசியம். மூன்று நாட்கள் தொடர்ந்து பணிக்கு வரவில்லை என்றால் பணி நீக்கம் அதிகாரம் நிர்வாகத்திற்கு உள்ளது எனவும் தெரிவித்து இருக்கிறது. 

அரசு, பொதுத்துறை மற்றும் தேசிய வங்கிகளில் நிரந்த வேலைகளை இட ஒதுக்கீடுகள் மூலம் பெற்று வருகிறார்கள். இதைவிட கூடுதல் சலுகைகள் வேலை உத்தரவாதம் என கருதுவார்கள். இந்த அறிவிப்பு மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்க வாய்ப்பு இல்லை. மேலும் பாதுகாப்பு பணிகளில் தற்காலிக பணியாளர்கள் நியமனம் ஆபத்தானது. பாதுகாப்பு விதிகள் கடைபிடிக்காத பட்சத்தில் நடவடிக்கைகள் எடுக்க இயலாது. 

வாரியத்தை அணுகி சிறப்பு விலக்கு பெற்று கடைநிலை ஊழியர்களை தேர்வாணையம் மூலம் தேர்வு செய்ய வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் தெற்கு ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்துகிறது என்றார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Next Story

'என் மகராணி என்னைய விட்டு போறியேடா...'-திருச்சியை அதிர வைத்த சம்பவம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
nn

திருச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் வீட்டு மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை தொடங்கி இருக்கும் நிலையில் இது கொலைச் சம்பவம் என  சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ராஜகோபால் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு 19 வயதில் ஜெயஸ்ரீ என்ற மகள் இருந்தார். பி.ஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்த ஜெயஸ்ரீ அதே ஸ்ரீரங்கம் வடக்கு சித்திர வீதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடைய மகன் கிஷோரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரின் காதலும் இரு தரப்பு வீட்டுக்கும் தெரியும் என்றும் சொல்லப்படுகிறது.

ஸ்ரீராம் என்ற நண்பரின் வீட்டின் மாடியில் மாலை வேளையில் ஜெயஸ்ரீ கிஷோர் சந்தித்து பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஸ்ரீராமின் நண்பர்கள் தீபக், ராகுல், ரிஷிகேஷ் ஆகியோரும் மொட்டை மாடியில் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயஸ்ரீ கிஷோர் வழக்கம்போல் ஸ்ரீராம் வீட்டின் மாடியில் பேசிக் கொண்டிருந்த பொழுது, திடீரென தவறி விழுந்த ஜெயஸ்ரீக்கு ரத்த காயம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் கிஷோர், ஸ்ரீராம் ஆகியோர் அவரை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பின் தலையில் ரத்தம் அதிகமாக வெளியேறியதால் மேல் சிகிச்சைக்காக திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஜெயஸ்ரீ திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயஸ்ரீ ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். திருமணம் செய்து கொள்ளலாம் என ஜெயஸ்ரீ கிஷோரிடம் கூறியதாகவும் ஆனால் தற்பொழுது திருமணம் வேண்டாம் என கிஷோர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அப்பொழுது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அருகில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை கைகளாலே கிஷோர் உடைத்துள்ளார். இதனால் அவருடைய கைகளில் ரத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக பக்கத்தில் இருந்த  ஸ்ரீராம் மற்றும் அவரது நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் சிறிது நேரத்தில் ஜெயஸ்ரீ மாடியிலிருந்து தவறி விழுந்ததாக கூறி அவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் ஜெயஸ்ரீயை மருத்துவர்கள் பரிசோதித்து அவர் உயிரிழந்ததை தெரிவித்ததும் உடன் வந்த கிஷோர் உள்ளிட்ட அத்தனை பேரும் தப்பித்து ஓடி தலைமறைவாகினர். உண்மையாக ஜெயஸ்ரீ தவறிவிழுந்து உயிரிழந்தால் ஏன் நண்பர்கள் அனைவரும் தலைமறைவாக வேண்டும் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது.

இது தொடர்பாக போலீசார் தேர்தல் வேட்டை நடத்திய நிலையில் கரியமாணிக்கம் பகுதியில்  உள்ள ஸ்ரீகிருஷ்ணன் என்பவரின் வீட்டில் ஐந்து பேரும் தலைமறைவாகி இருந்தது தெரிய வந்தது. 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அடைக்கலம் தந்த ஸ்ரீ கிருஷ்ணனையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை சென்று கொண்டிருக்கிறது.

கிஷோர் மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேரும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் கிஷோர் அந்த பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் தந்தையிடம் ஜெயஸ்ரீயின் உடல் ஒப்படைக்கப்பட்டது. அப்பொழுது கண்ணீர் விட்டு கதறி அழுத அவரது தந்தை, ''அப்பா உனக்கு என்ன பாவம் செய்தேன்... என் மகராணி என்னைய விட்டு போறியேடா... நான் என்ன பாவம் செஞ்ச... கொன்னுட்டாங்களே பாவிங்க எல்லாம்... யாருக்காகவோ உன்னை இழந்துட்டியேடா...'' என்று கதறி அழுதது நெஞ்சை உறைய வைத்தது.