தமிழ்நாடு சட்டமன்றம் இன்று கூடியது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவிரி விவகாரத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைக் கர்நாடக அரசு நிறைவேற்ற உத்தரவிடக் கோரி, தமிழக அரசு சார்பில் தனித் தீர்மானம் கொண்டுவந்து, அது இன்று நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் நீண்டநாள் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை குறித்து கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், “எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இருந்த வரைக்கும், தற்போது 27 வருடம் என்றால் அன்றைய ஆட்சியில் 22, 23 வருடம் கைதிகளாக இருந்திருப்பார்கள். அன்று அவர்களை விடுதலை செய்ய எந்தவித நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை.
நீதியரசர் ஆதிநாதன் கமிஷன் உட்பட இரண்டு குழு அமைத்தோம், அதில் இரண்டிலும் கிடைக்காதவர்களுக்கு அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அவர்களையும் சேர்த்து ஆளுநருக்கு அனுப்பியுள்ளோம். அதில் நீண்டநாள் இஸ்லாமிய சிறைவாசிகள் 28 பேர் இடம்பெற்றுள்ளார்கள். இது தொடர்பாக 49 கோப்புகள் ஆளுநருடன் தான் இருக்கிறது. ஒப்புதல் கொடுப்பார் என்று நம்புவோம். ஆளுநர் ஒப்புதல் தராவிட்டால் அவர்கள் உச்சநீதிமன்றம் நாடலாம்” என்று தெரிவித்தார்.