ADVERTISEMENT

திருமணத்தை மீறிய உறவு; விடுமுறைக்கு ஊருக்கு வந்த ராணுவ வீரருக்கு நேர்ந்த சோகம்

04:22 PM Oct 18, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள வெம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேதமுத்து. இவருடைய மகன் வேல்முருகன் (25). இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் பணிக்குச் சேர்ந்த பின்பு, தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். இதனிடையே, கடந்த கடந்த 1 ஆம் தேதி விடுப்புக்காகத் தனது சொந்த ஊரான வெம்பூருக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (16-10-23) இரவு, இவர் தனது வீட்டின் மாடி அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் அவர் உடலில் பலத்த கத்திக் குத்து காயங்களுடன் மாடியிலிருந்து கீழே வந்து சத்தம் போட்டுள்ளார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்ட அவரது தாய் பாக்கியலட்சுமி, சகோதரி முருகவள்ளி ஆகியோர் அறையிலிருந்து ஓடி வந்தனர். ரத்த வெள்ளத்தில் இருந்த வேல்முருகனைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குத் தயாராக இருந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உடனடியாக, இந்த சம்பவம் தொடர்பாக மாசார்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். தகவல் அறிந்த காவல் ஆய்வாளர் ஜின்னா பீர் முகமது உள்ளிட்ட மற்ற காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த வேல்முருகனை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், வெம்பூர் கிராமத்தைச் சேர்ந்த மாரிச்சாமி (29, திருமணம் ஆகாதவர்) என்பவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த 32 வயது திருமணமான பெண்ணுக்கும் இடையே தொடர்பு இருந்துள்ளதாகத் தெரியவந்தது. மேலும், ராணுவத்தில் பணியாற்றி வந்த வேல்முருகன், விடுப்பில் ஊருக்கு வந்தபோது அந்தப் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, தொடர்பில் இருந்துள்ளார். இதனை அறிந்த மாரிச்சாமி, வேல்முருகனை கண்டித்துள்ளார். ஆனாலும், வேல்முருகன் அந்தப் பெண்ணுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார்.

இதனால், மாரிச்சாமிக்கும், வேல்முருகனுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த விரோதத்தால், வேல்முருகனை கொலை செய்ய மாரிச்சாமி திட்டமிட்டுள்ளார். அதன்படி நேற்று முன்தினம் இரவு வேல்முருகன் மாடிக்குச் சென்று தூங்குவதை மாரிச்சாமி நோட்டமிட்டுள்ளார். இதையடுத்து மாரிச்சாமி, வேல்முருகன் வீட்டு மாடிக்குச் சென்று அங்கு தூங்கிக் கொண்டிருந்த அவரைச் சரமாரியாகக் கத்தியால் குத்தி அதன் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து மாசார்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மாரிச்சாமியை கைது செய்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT