Hapag-Lloyd investment of Rs. 2500 crores in Tamil Nadu

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமாக திகழக்கூடிய ஹபக் லாய்டு (Hapag-Lloyd) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜீஸ்பெர் கன்ஸ்ட்ராப் மற்றும் இயக்குநர் அல்பர்ட் லொரேண்ட் ஆகியோர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேற்று (31.01.2024) அன்று சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எடுத்துரைத்தார். மேலும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து இக்கூட்டத்தில், 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீட்டில், தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட இந்நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இம்முதலீடு வாயிலாக 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு, தமிழ்நாட்டின் எதிர்கால தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிழகச்சியில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, கைடன்ஸ் (guidance) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும், தலைமைச் செயல் அலுவலருமான வே.விஷ்ணு ஆகியோர் உடனிருந்தனர்.