இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘17/01/2024 அன்று காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக காமராஜர் சாலையில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக சூழ்நிலைக்கு தகுந்தவாறு கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அதில், காமராஜர் சாலையில் பொது மக்கள், சாலையில் அதிகமாகும் வரை எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படமாட்டாது.
இதனை தொடர்ந்து, மெரினா கடற்கரைக்கு வரும் வாகனங்கள் காமராஜர் சாலையில் (மெரினா கடற்கரை சாலை) அதிகரிக்கும் போது போர்நினைவுச் சின்னத்தில் இருந்து ( War Memorial) வரும் வாகனங்கள் வழக்கம் போல் கலங்கரை விளக்கம் ( Light House) நோக்கி அனுமதிக்கப்படும். கலங்கரை விளக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் இடதுபுறமாக சாலை பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
மேலும், வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை செய்தும், பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது (விக்டோரியா விடுதி சாலை ஒரு வழிப் பாதையாக மாற்றப்படும்). இதனால், வாகன ஓட்டுநர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.