ADVERTISEMENT

6 மாதத்தில் முடிந்த திருமண வாழ்க்கை; மனைவி எடுத்த முடிவால் கணவன் தற்கொலை

11:23 AM Feb 07, 2024 | ArunPrakash

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (37). இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த தானியர் பள்ளி ஆசிரியைக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த பின்னர் கணவன் மனைவி இருவரும் சென்னை கே.கே நகரில் தங்கி அங்கேயே வேலை செய்து வந்துள்ளனர்.

ADVERTISEMENT

அருண்குமாருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து தேன்மொழி கணவரிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு அருண்குமார் தேன்மொழியை அவருடைய தாய் வீட்டில் விட்டு விட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் இருவரும் செல்போனில் பேசி சண்டை போட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இதனால் தேன்மொழி கடுமையான மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம்(5.2.2024) இரவு அவரது வீட்டில் தேன்மொழி தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த தேன்மொழியை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு தேன்மொழிக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். அதன் பின்னர் அவரை உடனடியாக மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேன்மொழி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலீசார் உயிரிழந்த தேன்மொழியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் பெண்ணின் உறவினர்கள் பெண்ணின் இறப்புக்கு கரணமான கணவர் அருண்குமார், மாமனார் சிவராஜ் உட்பட அந்த குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் கட்டாயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் திருமணமாகி 6 மாதங்களே ஆனதால் இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்த வருவாய் கோட்டாட்சியருக்கு போலீசார் பரிந்துரை செய்தனர்.

அதன் பின்னர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் குவிந்த பெண்ணின் உறவினர்கள் தேன்மொழியின் தற்கொலைக்கு காரணமான பெண்ணின் கணவர் வீட்டாரை கைது செய்தால் தான் சடலத்தை வாங்குவோம் என கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வந்த வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமார் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கலைத்தனர்.

சம்பவம் குறித்து வாணியம்பாடி கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள பெண்ணின் கணவர் வீட்டாரை போலீசார் தேடி வந்த நிலையில், மனைவி தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்து சென்னை கேகே நகரில் தங்கியிருந்த அறையில் கணவர் அருண்குமாரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது இரு குடும்பத்தார் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT