ADVERTISEMENT

''என்னுடைய தமிழுணர்வுக்கு காரணமானவரை இழந்துவிட்டேன்'' - தொ.பரமசிவன் மறைவுக்கு சீமான் கண்ணீர் அஞ்சலி!

10:05 PM Dec 24, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தின் பண்பாட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான தொ.பரமசிவன் (70) உடல்நலக் குறைவால் காலமானார். பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.

தமிழில் இயங்கி வந்த முக்கியமான பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் தொ.பரமசிவன். 'அறியப்படாத தமிழகம்', 'பண்பாட்டு அசைவுகள்' போன்ற நூல்கள் அவரின் முக்கியப் படைப்புகளாகத் திகழ்கின்றன. தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தனது நூல்களின் மூலம் தேடித்தந்தவர். அவரது 'அழகர்கோயில்' நூல், கோயில் ஆய்வுகளுக்கு முன்னோடி நூலாகத் தற்போது வரை திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அவரது மறைவு குறித்து, தனியார் தொலைக்காட்சியில் தனது இரங்கலை தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மற்றவர்களுக்கு இது ஒரு செய்தியாக இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படியில்லை. நான் அவரிடம் படித்த மாணவன். இளையான்குடி டாக்டர்.சாகிர் உசேன் கல்லூரியில் அவர் தமிழ்த்துறை தலைவராக இருந்தார். அந்த நேரத்தில் நான் ரொம்ப சின்ன பையன். இளங்கலை பொருளாதார மாணவன்தான். எனக்கு இவ்வளவு தமிழுணர்வு இருக்கிறது என்றால் அதற்கு ஐயாதான் காரணம். என்னை ஊட்டி வளர்த்தார் என்பதில் மாற்று செய்தி இருக்க முடியாது.

அப்பொழுது கல்லூரி ஆண்டு மலருக்குக் கவிதை எழுதிக் கொடுங்கள், கட்டுரை எழுதிக் கொடுங்கள், உங்கள் ஆற்றலை வெளிப்படுத்துங்கள் என்று அவர் அறிவிக்கிறார். அப்பொழுது கவிதைகளை நானும் எழுதி கொடுத்தேன். எல்லாமே காதல் கவிதையாக இருக்கிறது என அதையெல்லாம் கிழித்து மேலே வீசினார். அப்பொழுது எனக்குக் கோபம் வந்து அண்ணன்களைக் கூட்டிக்கொண்டு அய்யா ஏன் இப்படிப் பண்ணுகிறார் என அவரிடம் கேட்போம். ''தம்பி நல்லாதானே கவிதை எழுதி இருக்கான் நீங்க ஏன் கிழித்துத் தூர வீசுகிறார்கள்'' எனக் கேட்க ''என்னடா உன் தம்பி எழுதிட்டான். காதலைதானே பாடுகிறான் மனிதனைப் பாடுவதற்கு ஒருத்தனும் இல்லையேடா. அவனாவது வரட்டும்டா... மனிதனைப் பாடச் சொல்லுடா'' என்றார். அன்னைக்கு தான் எனக்கு மானுடம் குறித்த சிந்தனையே வந்தது. அப்பேர்ப்பட்ட ஒரு பேரறிஞர் அவர்.

அதன்பின் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைக்குப் போய்விட்டார். அங்கிருந்து அவர் பணி செய்துவந்தார். அவருக்கு சர்க்கரை நோய் இருந்தது. அண்மையில் நான் சந்திக்கும்போது எனக்கு வயசு ஆயிடுச்சு என்று அவர் கூற, இதெல்லாம் ஒரு வயசா ஏன் இப்படிப் பேசுகிறீர்கள் என்று திட்டி விட்டேன். தற்பொழுது, ஒரு பெரிய அறிஞரை தமிழ்ப் பேரினத்தின் ஒரு அறிவு பெட்டகத்தை இழந்துவிட்டோம். நான் கட்சித் தொடங்கியபோது என்னை ஊக்கப்படுத்தி, அரசியல் வழிப்படுத்திய ஒரு பேராசான். அப்படிபட்ட ஒரு தமிழறிஞரை தமிழ்ச் சமூகம் இழந்துவிட்டது. 'அறியப்படாத தமிழகம்' என்பன உள்ளிட்ட எத்தனையோ புத்தகங்களை எழுதிய அப்படிப்பட்ட அறிஞருடைய மாணவன், அவரிடம் தமிழ்ப் படித்த மாணவன் என்ற திமிர் எனக்கு உண்டு. அப்படிப்பட்ட ஒரு பேரறிஞரை நான் இழந்துவிட்டேன் என்பதால், ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு எனக் கண்ணீர் மல்க தனது இரங்கலைத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT