ADVERTISEMENT

ஓசூரில் அரிவாளால் வெட்டி ரவுடி படுகொலை; அடுத்தடுத்த கொலைகளால் பொதுமக்கள் கிலி! 

10:34 AM Mar 03, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஓசூரில் வட்டித்தொழில் செய்து வந்த ரவுடி மர்ம நபர்களால் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஒரே வாரத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள மூன்று கொலை சம்பவங்களால் ஓசூர் நகர மக்கள் கிலியில் உறைந்து போயுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அந்திவாடி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் உதயகுமார் (32). கார் ஓட்டுநர். அத்துடன், வட்டித் தொழிலும் செய்து வந்தார். பிப். 28ம் தேதி இரவு 11 மணியளவில், அந்தப் பகுதியில் உள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், உதயகுமாரை திடீரென்று சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர், நிகழ்விடத்திலேயே பலியானார். அவருடைய தலையில் சில வெட்டுகள் ஆழமாக இறங்கி இருந்தது.

இதுகுறித்து மத்திகிரி காவல்நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். உதயகுமாரின் சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையுண்ட உதயகுமாருக்கு மனைவி, இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2020ல் நாகராஜ் என்பவரை வெட்டிக் கொல்ல முயன்றதாக அவர் மீது மத்திகிரி காவல்நிலையத்தில் ஒரு வழக்கு விசாரணையில் உள்ளது.

அந்த வழக்கின் மீதான விசாரணை வரும் 8ம் தேதி ஓசூர் நீதிமன்றத்தில் நடக்க உள்ளது. இந்த நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டு இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனால், அவரை பழிவாங்கும் நோக்கத்தில் கொலை செய்துள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. அவர் உள்ளூரைச் சேர்ந்த முக்கிய ரவுடி ஒருவருடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததாகவும், அவரை முன்னிறுத்தி வட்டித்தொழில் செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

கொலையான நபர் எந்த டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கினார் என்பது குறித்தும் விசாரிக்கின்றனர். கொலையாளிகள் அவரை டாஸ்மாக் கடையில் இருந்தே பின்தொடர்ந்து வந்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கும் காவல்துறையினர், வரும் வழித்தடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் கொலையாளிகளின் உருவங்கள் பதிந்துள்ளதா என்பது குறித்தும் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

இந்தத் தகவல்கள் அடிப்படையில் மத்திகிரி காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு வாரத்தில் 3 கொலை:

ஓசூரில் கடந்த ஒரு வாரத்தில் உதயகுமார் உள்பட மூன்று பேர் கொல்லப்பட்டு உள்ளனர். பெங்களூருவுக்கு அருகில் ஓசூர் மாநகரம் இருப்பதால், கொலையாளிகள் குற்றங்களை நிகழ்த்திவிட்டு எளிதில் பெங்களூருவுக்கு தப்பிச்சென்று பதுங்கி விடுகின்றனர். இதனால் குற்றவாளிகளைப் பிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், கனரக தொழிற்சாலைகள், சிறு மற்றும் நடுத்தர அளவிலான ஐடி நிறுவனங்கள் நிறைந்த பகுதி என்பதால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களும் வேலை தேடி ஓசூருக்கு படையெடுக்கின்றனர். இதனால்தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் பகுதி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் நகரம் என்பதால் கோடீஸ்வரர்களும் பணப்புழக்கமும் அதிகம். அதனால் குற்றங்களும் சகஜமாக அரங்கேறி வருகின்றன. அடுத்தடுத்த கொலைகளால் ஓசூர் நகர மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT